நெல்லை மாவட்ட எஸ்.பிக்கு கைது வாரண்ட்..!! தமிழக எஸ்.சி & எஸ்.டி ஆணையம் அதிரடி உத்தரவு..!!
TamilNadu SC ST Commission orders to arrest Nellai district SP
திருநெல்வேலி மாவட்டத்தை அடுத்த பாளையங்கோட்டை வட்டம் சிவந்திபட்டு கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தம் என்பவர் தன் நிலத்தை ஆக்கிரமித்து போலி ஆவணத்தின் வாயிலாக பெயர் மாற்றம் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திடம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நெல்லை மாவட்ட எஸ்பிக்கு கடந்த ஜூன் 10ஆம் தேதி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அந்த நோட்டீசுக்கு எந்த பதிலும் அளிக்காததால் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பின்னரும் ஆணையத்தின் நோட்டீஸிக்கு பதிலளிக்காததால் சம்பந்தப்பட்ட கோப்புகளுடன் அக்டோபர் 10 ஆம் தேதி ஆணையத்தின் முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு நெல்லை மாவட்ட எஸ்பி க்கு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியும் நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன் ஆஜராகவில்லை. அதன் காரணமாக நவம்பர் 30ஆம் தேதி ஆஜராகுமாறு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அன்றைய தினம் அவர் ஆஜராகாமல் நெல்லை மாவட்ட எஸ்பிக்கு பதிலாக ஏ.டி.எஸ்.பி மாரிராஜனை அனுப்பி வைத்திருந்தார்.
இதனால் கடுப்பான ஆணையம் தமிழக எஸ்.சி எஸ்.டி ஆணைய சட்டம் 2021 பிரிவு 9ன் படி நெல்லை மாவட்ட எஸ்.பி சரவணனுக்கு 500 ரூபாய் அபராதமும் அவரை கைது செய்து வரும் 28ஆம் தேதி ஆணையத்தின் முன்பு விசாரணைக்கு ஆஜர் படுத்துமாறு தென் மண்டல ஐ.ஜிக்கு உத்தரவிட்டுள்ளனர். நெல்லை மாவட்ட எஸ்.பியிடம் இருந்து அபராத தொகை வசூலிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
English Summary
TamilNadu SC ST Commission orders to arrest Nellai district SP