தா. பாண்டியன் மறைவு.. உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு - சி.பி.ஐ.எம்..! - Seithipunal
Seithipunal


இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் மறைவு, உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு என சி.பி.ஐ.எம் தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், " இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் அவர்கள்  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்துவிட்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலையும், செவ்வஞ்சலியையும் செலுத்துகிறது.

தோழர் தா. பாண்டியன் 8-ஆம் வகுப்பு படிக்கும்போதே பேச்சுப்போட்டியில் இணைந்து சிறந்த பேச்சாளராக உருவானவர். தனது 15 வயதிலேயே பொதுவுடமை இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டவர். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இண்டர்மீடியட் படிக்கும் போது மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர். பின்னர், அதே கல்லூரியில் ஆங்கில பேராசிரியராகவும் பணியாற்றியவர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, தோழர் ஜீவானந்தம் அவர்கள் தொடங்கிய கலை இலக்கிய பெருமன்றத்தின் முதல் பொதுச் செயலாளராக பணியாற்றியவர். ஜனசக்தி நாளிதழில் ஆசிரியராக பல ஆண்டு காலம் பணியாற்றியவர். ‘சவுக்கடி’ என்ற புனை பெயரில் இவர் எழுதிய கட்டுரைகளுக்கு கட்சி எல்லைகளையும் தாண்டி வாசகர்கள் உண்டு. சென்னை  துறைமுகத்தில் தினக் கூலித் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி அதில் வெற்றியும் கண்டவர். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலைமை பெற்றவர். அரசியல், பொருளாதாரம், வரலாறு, தத்துவம் ஆகியவற்றில் பரந்த வாசிப்பு கொண்டவர். இவரது பேச்சுகள், எழுத்துக்கள், சொற்பொழிவுகள் அனைத்தும் பாமரருக்கும் புரியும் வகையில் பேசும் வலிமை பெற்றவர்.

வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், இலக்கியவாதி, நாடாளுமன்றவாதி, சிறந்த அரசியல்வாதி என பன்முகத் திறன் பெற்று சிறந்த ஆளுமையாக திகழ்ந்தவர். இறுதியாக, மதுரையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எழுச்சி மாநாட்டில், “ என் உடல் உறுப்புகள் அனைத்தும் செயல்பட மறுக்கின்றன, ஆனால் எனது மூளை மட்டும் நன்றாக செயல்படுகிறது, எனது இறுதி மூச்சுவரை உழைக்கும் மக்களுக்காக போராடுவேன்” என உணர்ச்சிமிகு உரையாற்றினார். 10 ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும், இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட பணியாற்றியவர்.
பொதுவாழ்வில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், இந்திய அரசியலில் மதவாத சக்திகளுக்கு எதிராகவும், ஜனநாயகத்திற்காகவும், உழைக்கும் மக்களின் நலன்களுக்காகவும் போராடிய சிறந்த போராளியாக திகழ்ந்தவர். அவரது மறைவு இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், இடதுசாரி இயக்கத்திற்கும் மட்டுமல்ல, உழைக்கும் மக்கள் அனைவருக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

தோழர் தா. பாண்டியன் மறைவால் துயருற்றிருக்கும் அவரது மகன் தோழர் ஜவஹர், மகள்களான அருணா, பிரேமா மற்றும் குடும்பத்தாருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த  அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CPIM Regret to Thames Pandiyan Passed Away


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->