மறக்குமா நெஞ்சம் || அதிக மக்கள் கூடியது எப்படி? கமிஷனர் விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
Tambaram commissioner said overcrowding was due to more tickets sales
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் நேற்று இசை புயல் ஏ.ஆர் ரகுமானின் "மறக்குமா நெஞ்சம்" என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மாலை தொடங்கிய இந்த நிகழ்ச்சியானது இரவு 11 மணி வரை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்காக 20,000 இருக்கைகள் போடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் அனைத்தும் ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் போதிய இடவசதி மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாததால் நிகழ்ச்சியை காண வந்த ஏ.ஆர் ரகுமானின் ரசிகர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
ஆன்லைனில் 2000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை டிக்கெட் முன் பதிவு செய்தவர்கள் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த நிகழ்ச்சியின் காரணமாக கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த போக்குவரத்து நெரிசலில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாகனமும் சிக்கிக் கொண்டதால் எதிர் திசையில் உள்ள சாலையில் அவர் பயணம் மேற்கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் இணையதள வாசிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனத்திடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தாம்பரம் காவல் ஆணையர் அமுல்ராஜ்க்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சென்னை பனையூரில் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் அமுல்ராஜ் நேரில் விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏ.ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சிக்கு 25,000 பேருக்கு மட்டுமே அனுமதி வாங்கிய நிலையில் கூடுதலாக 15 ஆயிரம் பேருக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு ஒரே நேரத்தில் 45,000 முதல் 50,000 பேர் காண்பதற்காக வந்துள்ளனர்.
இந்த குளறுபடி குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விரிவான விசாரணை நடத்தப்படும். போதுமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை. அனுமதி வாங்கியதை விட அதிகமானோர் நிகழ்ச்சியில் பங்கு பெற அனுமதிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும். கூடுதல் டிக்கெட்டைகள் அச்சிடப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளது" என தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
English Summary
Tambaram commissioner said overcrowding was due to more tickets sales