கள்ளச்சாராயத்தை ஒழிக்க தனிப்படை! விஜய் போட்ட மெகா பிளான்! கல்வராயன் மலையில் நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா!
Special forces to eradicate bootleg liquor Vijay mega plan Adhav Arjuna directly entered the field on Kalvarayan Hill
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் முதலமைச்சர் விஜயின் உத்தரவின் பேரில் சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியாக விளங்கும் கல்வராயன் மலை, அடர்ந்த காடுகள் மற்றும் மலைப் பகுதிகளை கொண்டிருப்பதால் பல ஆண்டுகளாக சட்டவிரோத கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் கடத்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த காலங்களில் நிகழ்ந்த விஷச்சாராய உயிரிழப்புகள் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளது.
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “கல்வராயன் மலையில் கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனையை முற்றிலும் ஒழிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற்காக சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் தீவிர கண்காணிப்பின் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும்” என்றார்.
மேலும், காவல்துறை நடவடிக்கைகள் மட்டுமின்றி சமூக மாற்றத்தின் மூலமும் போதைப் பழக்கத்தை ஒழிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் ஒரு பகுதியாக கல்வராயன் மலையில் 5 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு பயிற்சி மைதானம் மற்றும் மாணவர்களுக்கான விடுதி அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
“திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டினால் போதை கலாச்சாரத்தை கட்டுப்படுத்த முடியும். போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதே அரசின் இலக்கு,” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.
கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகளுடன் இளைஞர்களை விளையாட்டு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிநடத்தும் திட்டங்களையும் அரசு முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
English Summary
Special forces to eradicate bootleg liquor Vijay mega plan Adhav Arjuna directly entered the field on Kalvarayan Hill