தொடர் விடுமுறை:- தமிழகத்தில் சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு.!
special bus run in tamilnadu
தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது தொடர் விடுமுறை வருவதால், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக போக்குவரத்துக் கழகம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,
"முகூர்த்த நாளான நாளை (வெள்ளிக்கிழமை), வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 265 பேருந்துகளும், சனிக்கிழமை 350 பேருந்துகளும் இயக்கப்படும்.
மேலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 55 பேருந்துகளும், சனிக்கிழமை 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தவிர பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 925 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், சொந்த ஊர்களிலிருந்து திரும்பவும் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
special bus run in tamilnadu