வெளிமாநில விதைகளை பயன்படுத்தக் கூடாது - விதை ஆய்வுத்துறையினர் எச்சரிக்கை.!
seed inspectors warned for other state seeds dont use
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் தாலுகாவில் நூற்று ஐம்பத்து ஏழு விதை உரிமம் பெற்ற அரசு மற்றும் அரசு சார்ந்த தனியார் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் நாற்றுப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கார்த்திகை பட்டத்தில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், தரமான விதைகளை அரசு உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று விதை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் தெரிவித்ததாவது, "விவசாயத்திற்கு முக்கியமான ஒன்று விதை. அதற்காக தரமான விதைகளை உரிய விலையில் விவசாயிகளுக்கு கிடைப்பதற்காக விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை செயல்பட்டு வருகிறது.
விவசாயிகள் சாகுபடிக்கு தேவையான விதைகளை வாங்கும் போது, உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும். அவ்வாறு விதைகளை வாங்கும் போது, தவறாமல் விதை விபர பட்டியலில் உள்ள அனைத்து விபரங்களையும் பார்த்து வாங்க வேண்டும்.
அதேபோல், விற்பனை ரசீதில் உள்ள விபரங்களும், விதை விபர அட்டையில் உள்ள விபரங்களும் சரியாக உள்ளதா? என்பதை உறுதி செய்து, அதில் விவசாயிகள் கையொப்பமிட்டு வாங்க வேண்டும். அத்துடன் இந்த ரசீதை பயிர் சாகுபடி காலம் முடியும் வரை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், உரிமம் பெறாத ஏஜன்டுகள் மூலமாகவோ, எண்ணெய் உற்பத்தியாளர்களிடமோ, வெளிமாநில விதைகளை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இதையடுத்து, உரிமம் இல்லாமல் நிலக்கடலை விதைகளை விற்பவரின் மீது விதை சட்டங்கள் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் தெரிவித்தார்.
English Summary
seed inspectors warned for other state seeds dont use