விபத்தில் துண்டான சிறுவனின் கை., போராடி சாதனை புரிந்த சேலம் மருத்துவர்கள்.!
salem accident child injured
சேலத்தில் 11 வயது சிறுவனின் துண்டான கையை அறுவை சிகிச்சை மூலம் இணைத்து அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சேலம் 5 ரோடு அருகே கந்தம்பட்டி புறவழிச்சாலையில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளி ராமன், இவரது மகன் மௌலீஸ்வரன்(11 வயது). கடந்த 8ஆம் தேதி காலை வீட்து அருகே மௌலீஸ்வரன் விளையாடிக்கொண்டிருந்தான் அப்போது, பக்கத்தில் பஞ்சர் போடும் கடையில் இருந்த காற்றுப் பிடிக்கும் இயந்திரம் அழுத்தம் தாங்காமல் வெடித்தது.
அப்போது பறந்து வந்த இரும்புத் துண்டு ஒன்று மௌலீஸ்வரனின் வலது கையை மணிக்கட்டு வரை துண்டாக்கியுள்ளது. இதையடுத்து, கதறி துடித்த பெற்றோர்கள் சிறுவனை உடனடியாக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். துண்டான அவனது கையின் பகுதியை பிளாஸ்டிக் பை ஒன்றில் போட்டு, அதில் ஐஸ் கட்டியைச் சுற்றி வைத்து பாதுகாப்பாக பெற்றோர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
விபத்து நடந்த இடத்துக்குக்கு உடனடியாக வந்த 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரை மணி நேரத்தில் சேலம் அரசு தலைமை மருத்துவமனையை அடைந்ததால் கையை இணைத்துவிட முடியும் என்ற நம்பிக்கை மருத்துவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதன்படி 11 மணி நேரம் போராடி, வெற்றிகரமாக துண்டான பகுதியை கையுடன் இணைத்து மருத்துவர்கள் குழு சாதனை புரிந்துள்ளனர்.
கை தூண்டுவது போன்ற விபத்துகள் நடக்கும் போது, உடலிருந்து துண்டாகும் பகுதியை பிளாஸ்டிக் பை ஒன்றில் போட்டு, ஐஸ் கட்டியைச் சுற்றி வைத்து 6 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு எடுத்து வந்துவிட்டால் மீண்டும் உடலிருந்து தூண்டான பகுதியை இணைப்பது பெருமளவு சாத்தியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
மௌலீஸ்வரன் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகிறான் என்றும், இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அவன் உடல்நிலை சரியாகி வீட்டுக்கு செல்லலாம் என்றும் அதன்பின் அவனது கை வழக்கம்போல செயல்படும் என்றும் மருத்துவர்கள் கூறினர்.
இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் செய்திருந்தால் 5 லட்ச ரூபாய் வரை செலவாகி இருக்கும் என்று கூறப்படும் நிலையில், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
salem accident child injured