ரூட் தல பிரச்சனையில்., என் மகன் அப்பாவி அவன் கையை ஏன் உடைச்சீங்க., தாய் நீதிமன்றத்தில் பரபரப்பு புகார்!!
route thala issue
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த ரூட்டு தல பிரச்னையில் சில மாணவர்கள் பேருந்தில் சென்ற சக மாணவர்களை பட்டா கத்தியால் துரத்தித் துரத்தி வெட்டினர். இந்த தாக்குதலில் உதயசங்கர் என்ற மாணவர் படுகாயமடைந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தத் தாக்குதல் தமிழகம் முழுவதும் பேரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாணவர்களை பட்டா கத்தியால் துரத்தித் துரத்தி வெட்டியதாக குற்றசாட்டி பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான மதன், ஆகாஷ், சரவணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட மதன், ஆகாஷ், சரவணன் ஆகியோர் கைகள் உடைக்கபட்டறிந்தது, இதற்க்கு விளக்கமளித்த காவல்துறை மாதவரம் பாலம் அருகே தப்பி செல்ல முயன்றபோது கீழே விழுந்து அவர்கள் கைகளை உடைத்துக் கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மதன், ஆகாஷ், சரவணன்ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கோரி 3 பேரும் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்,
தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, சம்பவம் நடந்த ஜூலை 23 ஆம் தேதி மதன் கல்லூரிக்கே செல்லவில்லை என்றும், வேறொரு விபத்தில் சிக்கி அவர் 2 மாதமாக விடுப்பில் வீட்டிலேயே இருந்ததாகவும் மதனின் தாயார் அம்மு நீதிமன்றத்தில் தெரிவித்தார். வீட்டில் இருந்த தன் மகனை கைது செய்து அவரது கையை உடைத்ததாக போலீசார் மீது அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், ஜூலை 23 ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் அரும்பாக்கத்தில் தாக்குதல் நடந்த நிலையில், பிற்பகல் 1.15 மணிக்கு மதன் அவரது சொந்த ஊரான பெரியபாளையத்தில் இருந்ததாகக் கூறிய அவரது தாய், அதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.