அருவியின் சாரல் நம்மை இழுக்கும்... மிக உயரமான எலிவால் அருவி..!
rat tail falls
திண்டுக்கல்லில் இருந்து ஏறத்தாழ 93கி.மீ தொலைவிலும், பழநியில் இருந்து ஏறத்தாழ 63கி.மீ தொலைவிலும், கொடைக்கானலில் இருந்து ஏறத்தாழ 20கி.மீ தொலைவிலும் அமைந்து ஆர்ப்பரித்து கொட்டும் அழகிய அருவிதான் எலிவால் அருவி.
இவ்வருவியை தலையாறு அருவி என்றும் அழைப்பர். வத்தலகுண்டு, பெரியகுளம் பகுதிகளில் இருந்து காட்ரோடு வழியாக கொடைக்கானல் செல்பவர்கள் டம்டம் பாறையிலிருந்து இந்த அருவியை பார்க்கலாம்.
கருப்பு பாறை குன்றின் பின்னணியில் நீர் வழிந்து கொட்டுவது ஒரு நீண்ட மெல்லிய வெள்ளை துண்டு போன்று பள்ளத்தாக்கு முழுவதும் தோன்றும்.
இந்த அருவிதான் தமிழ்நாட்டிலேயே மிக உயரமான அருவி. அருவியின் தலைப்பகுதிக்கும், கீழே விழும் பகுதிக்கும் செல்லமுடியும். அதற்கு நீங்கள் காடுகளில் நீண்ட தூரம் நடந்து அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வனத்துறையின் அனுமதி பெற்றே இங்கு செல்ல முடியும்.
அருவிக்கு செல்லும்போதே அருவியின் சாரல் நம்மை நனைத்துவிடும். ஆனால், அருவியின் அடிப்பகுதியை அடைவது தான் இங்கு சாதனையே.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அதிக அளவு மழை பெய்தால் மட்டுமே இதன் அழகை காண முடியும்.
ஒரு காட்டு வழியாக கீழே செல்லும்போது அமைதியாக தொடர்ந்து கீழ்நோக்கி செல்லும் ஒரு சிறிய நதியாக அருவியைப் பார்க்க இயலும். கீழே சென்றபின் பின்புறம் அண்ணாந்து பார்த்தால், நீர் பெரும் சரிவில் அமைதியாக வருவதை பார்க்க முடியும்.
இந்த அருவிக்கு தலையார், மூலையார், வறட்டார் போன்ற ஆறுகள் இணைந்து மஞ்சள் ஆறாக வருகிறது. இந்த ஆற்றை வழிமறித்து அணை கட்டியுள்ளார்கள். அந்த அணை மஞ்சளாறு அணை என அழைக்கப்படுகிறது.