2 நாட்களாக தொடர்ந்த தடை! தவிப்பில் இராமநாதபுர மீனவர்கள்!
Ramanthapuram fishermen 2nd day not go sea
தமிழகத்தின் தென் மாவட்டங்களை ஒட்டி உள்ள வங்கக்கடலில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் கடற்காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது.
இதனால் மீன்வளத்துறை, மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்தது.
அதனை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும், பலத்த காற்றுடன் கடல் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம், உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருக்கும் 500-க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
மண்டபம், பாம்பன் தெற்கு வாடி துறைமுகப்பகுதி, ராமேசுவரம் மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லாததால் மாவட்டத்தில் மொத்தம் 1750 விசைப்படகுகளும், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் தொடர்ந்து 2-வது நாளாக கடற்கரையில் ஓய்வெடுத்துள்ளன.
வானிலை மாற்றம் காரணமாக, மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சேர்ந்தவர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 நாட்களில் ராமநாதபுரத்தில் மட்டும் ரூ.10 கோடி அளவில் மீன்வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
இது குறித்து மீனவர்கள் தெரிவிக்கையில், ''ஒவ்வொரு முறை கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும்போது பல்வேறு இன்னல்களை சந்திக்கிறோம்.
குறிப்பாக இலங்கை கடற்படையினர் காரணமாக, 100 சதவீத அளவில் மீன்பிடிக்க முடிவதில்லை. அதனை தொடர்ந்து தற்போது வானிலையும் சாதகமாக இல்லாததால் 2 நாட்களாக கடலுக்கு செல்லாமல் குடும்பம் நடத்த வருமானமின்றி தவிக்கிறோம்'' என்றனர்.
English Summary
Ramanthapuram fishermen 2nd day not go sea