மதுக்கடையில் கொள்ளை முயற்சி: "சிக்கிய நண்பன்".. விடுதலை செய்ய பிளேடால் உடலை கிழித்துக்கொண்ட "அன்பு தோழன்".!
Police arrested a 17 year old boy who tried to rob a liquor store in Tiruvannamalai
திருவண்ணாமலையில் மாவட்டத்தில் மதுக்கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பெருமுட்டம் பகுதியில் உள்ள மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. வழக்கம்போல் இரவு மதுபான கடையை மூடிவிட்டு ஊழியர்கள் சென்றுள்ளனர். அப்பொழுது நள்ளிரவில் மூன்று மர்ம நபர்கள் கடப்பாரையால் மதுபான கடையை உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், அப்பொழுது அவ்வழியாக வந்த ரோந்து போலீசாரை பார்த்து இரண்டு பேர் தப்பி ஓடி உள்ளனர். இந்நிலையில், 17 வயது சிறுவன் மட்டும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டான். இதையடுத்து 17 வயது சிறுவனை கைது செய்த போலீசார், பணத்தை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், மேல்புழுதியூரை சேர்ந்த கிஷோர் (17) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய சந்தோஷ் மற்றும் விஷால் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் செங்கம் காவல்துறை அலுவலகம் முன்பு மது போதையில் வந்த விஷால், தனது நண்பனை விடுதலை செய்யுமாறு கூறி திடீரென உடலில் பிளேடால் கிழித்துக்கொண்டுள்ளார்.
இதையடுத்து போலீசார் விஷாலை மீட்டு சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் விஷால் மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் தப்பி ஓடிய விஷாலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Police arrested a 17 year old boy who tried to rob a liquor store in Tiruvannamalai