மறக்க முடியாத அளவிற்கு "மறக்குமா நெஞ்சம்" அமைந்துவிட்டது! மன்னிப்பு கோரிய ஏசிடிசி நிறுவனம்!
Organizer apologized for ARR mukumuma Nenjam show mess
கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை பனையூர் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள ஆதித்யராம் பேலஸ் என்ற பகுதியில் "மறக்குமா நெஞ்சம்" என்ற தலைப்பில் ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த சமயம் சென்னையில் கன மழை பெய்ததால் கடைசி நேரத்தில் இசை நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என ரூ.2000 முதல் ரூ.15,000 பணம் செலுத்தி டிக்கெட் வாங்கி இசை நிகழ்ச்சிக்கு சென்ற ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எந்த ஒரு வசதியும் சரியான ஏற்பாடுகள் செய்யவில்லை. பார்க்கிங், சேர், உணவு, கழிவறை என அடிப்படை வசதியில்லாமல் பல ரசிகர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த நிலையில் இசை நிகழ்ச்சிக்காக உள்ளே செல்ல பல மணி நேரம் வரிசையில் நின்ற ரசிகர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகினர். மேலும் இசை நிகழ்ச்சிக்கு ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஏ.ஆர் ரகுமான் கச்சேரியை பார்க்க கார்களில் வந்த பலரும் பார்க்கிங் வசதி இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி விடப்பட்டதால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்து போலீசாரிடம் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டதை காண முடிந்தது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் பொது மக்களின் சிரமத்திற்கு மன்னிப்பு கோரி உள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "சென்னைக்கும் புகழ்பெற்ற ஏ.ஆர் ரகுமான் அவர்களுக்கும் நன்றிகள்! நம்பமுடியாத வரவேற்பு, அபரிமிதமான கூட்டம் எங்கள் நிகழ்ச்சியை மாபெரும் வெற்றியடையச் செய்தது. கூட்ட நெரிசலில் கலந்து கொள்ள முடியாதவர்கள் எங்களை மன்னிக்கவும். நாங்கள் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்" என பதிவிட்டுள்ளது.
English Summary
Organizer apologized for ARR mukumuma Nenjam show mess