தமிழகத்தின் 9 இடங்களில் ஒரே நேரத்தில் என்.ஐ.ஏ. ரெய்டு...! சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு வலை...!
NIA raids 9 places Tamil Nadu simultaneously net international drug trafficking gang
தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னையில் 6 இடங்கள், மதுரையில் ஒரு இடம் என தமிழகம் முழுவதும் மொத்தம் 9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சோதனை நடைபெறும் இடங்களில் அதிகாரிகள் முக்கிய ஆவணங்கள் மற்றும் தொடர்புடைய தகவல்களை திரட்டி வருகின்றனர்.கடந்த 2024-ஆம் ஆண்டு அந்தமான் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் பறிமுதல் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், கிடைத்த தகவல்களின் தொடர்ச்சியாகவும் அவர்களுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தமான் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பின்னணியில் செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடத்தல் வலையமைப்பு குறித்து அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, மியான்மரை மையமாகக் கொண்டு செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் கைது செய்யப்பட்ட 7 பேருக்கும், தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
சோதனையின்போது கைப்பற்றப்படும் ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் பிற முக்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
NIA raids 9 places Tamil Nadu simultaneously net international drug trafficking gang