திருச்சியில் பார்க்கிங் வசதியுடன் புதிய மீன் மார்க்கெட்..!
New fish market with parking facility in Trichy..!
திருச்சியில் காந்தி மார்க்கெட் அருகில் கிழக்கு புலிவார்டு ரோடு பகுதியில் உள்ள பழமையான ஓட்டு கட்டிடத்தில் மீன் மார்க்கெட் இயங்கி வந்தது. இந்நிலையில் அந்த ஓட்டு கட்டிடத்தை இடித்து விட்டு அதே பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.13 கோடியில் புதிய மீன் மார்க்கெட் வளாகம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
தற்போது, புதிய கட்டடத்தின் கட்டுமான பணிகள் 75 சதவீதம் பூர்த்தி அடைந்துள்ள நிலையில்,வருகிற டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் புதிய மீன் மார்க்கெட் கட்டிடத்தை மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பழைய மீன் மார்க்கெட்டில் 60 கடைகள் மட்டுமே இயங்கி வந்ததால், பழைய மார்க்கெட் இடிக்கப்பட்டதை தொடர்ந்து தற்காலிகமாக விறகுபேட்டை பகுதியில் வியாபாரம் செய்ய மாநகராட்சி சார்பில் இடம் ஒதுக்கப்பட்டது.
25 ஆயிரம் சதுர அடியில் புதிய மீன் மார்க்கெட் வளாகம் பெரியதாக நல்ல இடவசதியுடன் கட்டப்படுகிறது. இரண்டு மாடியில் மீன் மற்றும் ஆட்டு இறைச்சி வியாபாரிகளுக்கு 148 கடைகள் அமைக்கப்படுகின்றன.
மேலும், இறைச்சி மற்றும் மீன் வகைகளை பாதுகாப்பதற்கு குளிர் பதன கிடங்கு வசதியும் செய்யப்படுகிறது. பழைய கட்டிடத்தில் பார்க்கிங் வசதி இல்லாமல் இருந்ததனால் அப்பகுதியில் கடுமையாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் தற்போது கட்டப்பட்ட புதிய மார்க்கெட் வளாகத்தில் 200 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு பார்க்கிங் வசதி செய்யப்பட உள்ளது.
இப்பணிகள் குறித்து மாநகராட்சி இளநிலை இன்ஜினியர் ஒருவர் பேசும்போது, தற்போதைய நிலையில் ரூப் மற்றும் செங்கல் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளன. சிமெண்ட் பூச்சு, எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பிங் வேலைகள் விரைவில் தொடங்க இருக்கின்றோம்.
வருகிற டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் பூர்த்தியடையும். அதன் பின்னர் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கும் பணி தொடங்கும். டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரியில் புதிய மீன் மார்க்கெட் உறுதியாக திறக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
English Summary
New fish market with parking facility in Trichy..!