முசிறி : பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரம்.. தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு.!
Musiri school student death case filed against 3 teachers
திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது.இந்தப் பள்ளியில் தோளூர் பட்டியைச் சேர்ந்த மவுலிஸ்வரன் என்ற மாணவன் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்துள்ளனர். அப்போது சக மாணவர்கள் சிறு சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடி உள்ளனர். இதில் சில மாணவர்கள் மவுலீஸ்வரன் தான் கற்களை தூக்கி வீசியதாக தவறாக நினைத்து 3 மாணவர்கள் சேர்ந்து அவரை தாக்கி உள்ளனர்.
இதில் மாணவன் மவுலீஸ்வரன் படுகாயம் அடைந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்த மாணவர்கள் உடனடியாக ஆசிரியருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி விரைந்து வந்த ஆசிரியர்கள் மாணவனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஆசிரியர்கள் சம்பவம் குறித்து மாணவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மாணவரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு மாணவனின் இறப்புக்கு நியாயம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மவுலீஸ்வரனைத் தாக்கிய 3 மாணவர்களை தனியாக அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சக மாணவர்கள் தாக்கி மாணவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 3 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இந்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
Musiri school student death case filed against 3 teachers