வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு.!! முதலமைச்சர் அவசர ஆலோசனை!!
MKStalin discuss about vanniyar reservation
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
குறிப்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான வில்சன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்கள் உட்பட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கும் சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீடு தற்காலிகமாக பிரித்து வழங்கப்பட்டது.
அதன் பிறகு திமுக ஆட்சி அமைந்ததும் இந்த உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடங்கப்பட்ட வழக்கில் தமிழக அரசின் ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவில் எதன் அடிப்படையில் இந்த உள் இட ஒதுக்கீடு பிரித்து வழங்கப்பட்டது? நீதிமன்றம் எழுதிய கேள்விக்கு அதற்கான தரவுகளை தமிழக அரசு சமர்ப்பிக்க தவறியதால் பிரித்து வழங்கப்பட்ட உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.
இதனை அடுத்து இட ஒதுக்கீடு தொடர்பாக தரவுகளை திரட்ட தமிழக அரசு குழு அமைத்த நிலையில் அந்த குழுவின் காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதேபோன்று தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
MKStalin discuss about vanniyar reservation