இரு வேறு சமூகத்தை சேர்ந்த காதல் ஜோடி! பெற்றோர்கள் எதிர்ப்பால் விபரீத முடிவு!
Love couple committed suicide
பெரியகுளம் பகுதியில் பெற்றோர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர்கள் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி: பெரியகுளம் அருகே காந்திநகரை சேர்ந்தவர் வேலவர். இவர் கூலித் தொழிலாளி. இவரது மகன் மாரிமுத்து (வயது 22). அதே பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் மகள் மகாலட்சுமி (வயது15).
மாரிமுத்து, மகாலட்சுமி இருவருக்கிடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
ஆதலால் இவர்களது பெற்றோர்கள் இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாரிமுத்துவும், மகாலட்சுமியும் சேர்ந்து வாழ முடியாததால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி, இருவரும் நேற்று முன்தினம் இரவு, வீட்டை விட்டு வெளியேறினர். பிள்ளைகளை காணவில்லை என அவர்களது பெற்றோர்களும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை .
இந்நிலையில் காந்திநகர் அருகே உள்ள மாந்தோப்பில் ஒரு மரத்தில் நேற்று காலை மாரிமுத்துவும், மகாலட்சுமியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இருவரும் தூக்கில் தொங்கியபடி கிடந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்து உடனடியாக இது குறித்து பெரியகுளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் பெரியகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, தூக்கில் தொங்கி கிடந்த காதல் ஜோடியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து பெரியகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியகுளம் பகுதியில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Love couple committed suicide