ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு ஓர் சிறப்புப் பார்வை..!! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் விமர்சையாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள், இந்த ஆண்டும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. 

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பது குறித்து பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு இடைவெளி வழிகாட்டுதல்கள் அடிப்படையில் திறந்தவெளி அரங்கின் அளவிற்கேற்ப அதிகபட்சமாக 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 

300 மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமே அனுமதி... ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் அனைத்து துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், பார்வையாளர்களும் தடுப்பூசி போட்டதற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும்... ஜல்லிக்கட்டு என்றால் புத்துணர்ச்சி பிறக்கத்தானே செய்கிறது.

ஜல்லிக்கட்டு சிறப்பு :

ஜல்லிக்கட்டு என்றால் நம் மனதிற்கு முதலில் தோன்றுவது காளை மாடுதான். அந்த ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதே ஒரு தனிக்கலைதான். அந்த மாட்டை ராணுவத்திற்கு தயார் செய்யும் நபரைப் போல பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள். பச்சரிசி ஆட்டி உண்ணத் தருகிறார்கள். தினசரி குளியல், நடை, சீற்றம் பாய்வது என்று மாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக தயார் செய்வது ஒரு அரியக் கலை. ஜல்லிக்கட்டில் சில மாடுகள் லேசாகச் சீண்டினால் உடனே பாய்ந்துவிடக்கூடியவை. 

ஆனால், சில மாடுகளோ சலனமேயில்லாமல் நின்று பார்த்தபடியே இருக்கும். நெருங்கிவந்து பாயும்போது மட்டுமே சீற்றம் கொள்ளும். இன்னும் ஒரு சில மாடுகள் பயங்கரமாக துள்ளி ஆடித் தெறிக்கும். இப்படி காளை மாடுஃஜல்லிக்கட்டு மாடு என்பது ஒரு குடும்பத்தின் அடையாளம்.

ஜல்லிக்கட்டில் இரண்டுவிதம் உள்ளது. ஒன்று வாடிவாசல் கொண்டது. அதில் மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக திறந்துவிடப்படுகின்றன. மற்றது வெளிவிரட்டு எனப்படும் திறந்தவெளியில் மாடுகள் அவிழ்த்துவிடப்படுவது. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் ஒரு போர்க்களம் போலிருக்கும். 

வாடிவாசல் என்பது ஜல்லிக்கட்டின்போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடம் ஆகும்.

மாட்டுப் பொங்கலன்று கால்நடைகளைக் குளிப்பாட்டி நல்ல உணவு கொடுத்து இரவு ஒரு திடலில் கொண்டு வந்து கட்டுவார்கள். அங்கு ஒரு மரத்தின் கீழே இறைவனின் உருவத்தைப் பிடித்துவைத்து பொங்கலிடுவார்கள். பின் பொங்கலை குவித்து பழங்களைச் சேர்த்து பிசைந்து மாடுகளுக்கும், குழந்தைகளுக்கும் ஊட்டுவார்கள். மறுநாள் அதிகாலை மாடுகளின் கழுத்தில் தேங்காய், பழங்களைக் கட்டி அவிழ்த்துவிடுவார்கள். 

முறைப்பெண்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்க, இளைஞர்கள் மாடுகளைத் துரத்தி அந்த தேங்காயைப் பறிப்பார்கள். இதுவே சேலம், கோவை, காரைக்குடி பகுதிகளில் மஞ்சு விரட்டு அல்லது வெளிவிரட்டு என்ற பெயரில் நடக்கிறது.

மாட்டை பிடிப்பதில் எத்தனை வகை இருக்கிறது தெரியுமா?

கொம்பைப் பிடித்து அழுத்துதல், கழுத்தைப் பிடித்துக்கொண்டு காளையின் மார்பில் தொங்குதல், கழுத்தைத் திருகல், திமில் என்னும் கொட்டேறியைத் தழுவல், தோளில் ஏறல், நெருக்கிப் பிடித்தல் முதலானவை காளையை அடக்கப் பொதுவாக கையாளும் உத்திகள்.

மாடு வாடிவாசலை விட்டு வெளியே வந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருக்கும் கோட்டை கடப்பதற்குள் நீங்கள் மாட்டினை தழுவி சென்றால் நீங்கள் வீரர்... பரிசுப் பொருள் உண்டு..! இப்படி மாடு பிடிக்கும்போது, சிறு அளவிலோ அல்லது பெரும் அளவிலோ காயங்கள் ஏற்படுவது வழக்கம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jallikattu special


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->