கடைசி 15 இடங்களில் வடக்கு, டெல்டா மாவட்டங்கள் அரசின் பாராமுகமே வீழ்ச்சிக்கு காரணம் - மருத்துவர் ராமதாஸ்!!
In the last 15 places North Delta districts are due to government negligence Dr Ramadoss
+2 தேர்வு முடிவில் கடைசி 15 இடங்களில் வடக்கு, டெல்டா மாவட்டங்கள்: தமிழக அரசின் பாராமுகமே வீழ்ச்சிக்கு காரணம் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார் . அறிக்கையில் குறிவுள்ளதாவது,
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை இல்லாதவகையில் அளவுக்கு 94.56% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வென்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் அடுத்த மாதம் நடைபெறும் துணைத்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கும் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
12&ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மிகவும் கவலையளிக்கும் உண்மை, இந்த ஆண்டும் வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்கள் தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது தான். திருவண்ணாமலை மாவட்டம் தான் தமிழ்நாட்டில் கடைசி இடத்தை பிடித்திருக்கிறது. கடைசி 10 இடங்களைப் பிடித்த திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, வேலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகியவை காவிரி பாசன மாவட்டங்கள். மீதமுள்ள 8 மாவட்டங்களும் வட தமிழ்நாட்டைச் சேர்ந்தவை.
அதேபோல், தேர்ச்சி விகிதத்தில் கடைசி 11 முதல் 15 இடங்களைப் பிடித்த திருவாரூர், விழுப்புரம், தஞ்சாவூர், தருமபுரி, புதுக்கோட்டை ஆகியவற்றில் திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகியவை காவிரி பாசன மாவட்டங்கள் ஆகும். தருமபுரி, விழுப்புரம் ஆகியவை வட மாவட்டங்கள் ஆகும். ஒட்டுமொத்தமாக கடைசி 15 இடங்களைப் பிடித்த மாவட்டங்களில் திருவண்ணாமலை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்கள் வட மாவட்டங்கள் ஆகும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்கள் காவிரி பாசனப் பகுதிகளைச் சேர்ந்தவை ஆகும்.
கடந்த ஆண்டு கடைசி 15 இடங்களை பிடித்த மாவட்டங்களில் கடலூர், செங்கல்பட்டு ஆகியவை தான் ஓரளவு முன்னேற்றம் அடைந்து முறையே 22, 18 ஆம் இடங்களைப் பிடித்துள்ளன. கடந்த முறை முன்னணியில் திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் கடைசி 15 இடங்களுக்குள் தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலை கடந்த ஓரிரு ஆண்டுகளில் ஏற்பட்டதல்ல. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலை தான் காணப்படுகிறது. ஒருமுறை கூட வட மாவட்டங்கள் முதல் 10 இடங்களுக்குள் வந்தது இல்லை. அதேபோல், ஒருமுறை கூட கடைசி 10 இடங்களில் தென் மாவட்டங்கள் வந்தது கிடையாது. இந்த நிலையை மாற்றுவதற்கு தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த அரசுகள் எந்த முயற்சியும் செய்யவில்லை.
தேர்ச்சி விகிதத்தில் வட மாவட்டங்கள் கடைசி இடங்களைப் பிடிப்பதற்கு தமிழகத்தை ஆண்ட, ஆளும் கட்சிகள் தான் பொறுப்பேற்க வேண்டும். அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு முதன்மைக் காரணம். வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் போன்ற முதன்மைப் பாடங்களை நடத்துவதற்குக் கூட ஆசிரியர்கள் இல்லை. அதேநேரத்தில் தென் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் இந்தப் பாடங்களை நடத்துவதற்கு இரண்டு ஆசிரியர்களும், சில பள்ளிகளில் மூன்று ஆசிரியர்களும் உள்ளன. வட மாவடங்களில் உள்ள பள்ளிகளில் புதிதாக பணி அமர்த்தப்படும் ஆசிரியர்களில் பெரும்பான்மையானோர் அடுத்த சில மாவட்டங்களில் செய்ய வேண்டியதை செய்து தென் மாவட்டங்களிலுள்ள தங்களின் சொந்த ஊர்களுக்கு இட மாற்றம் பெற்று சென்று விடுகின்றனர்.
வட மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு இரண்டாவது காரணம் அங்குள்ள மக்களின் சமூக, பொருளாதாரக் காரணிகள் தான். வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் மக்கள் வன்னியரும், பட்டியல் சமூகத்தினரும் தான். அவர்களில் வறுமையில் வாடும், குடிசை வீடுகளில் வாழும் வன்னியர்களால் அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சேர முடியாது. அரசு பள்ளிகளில் தான் சேர்ந்து பயில முடியும். ஆனால், அங்கு போதிய கட்டமைப்புகளோ, ஆசிரியர்களோ இல்லை. மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் காலையில் எழுந்தவுடன் வாழ்வாதாரத்திற்கான சில பணிகளை செய்து விட்டு தான் பள்ளிகளுக்கு செல்ல முடியும்; அவர்களால் தனிப்பயிற்சி வகுப்புகளில் சேர முடியாது. வாழ்வாதாரப்பணிகள் காரணமாக அவர்களால் அதிக நேரம் படிக்கவும் முடியாது. அதனால் தான் அவர்களும் தேர்வில் தோல்வியடைந்து, மாவட்ட தேர்ச்சி விகிதம் குறைவதற்கும் காரணமாகின்றனர்.
இந்த இருகாரணங்களையும் மாற்ற வேண்டும் என்று தான் பா.ம.க. பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. அதையேற்று வடமாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்தல், வன்னியர்கள் உள்ளிட்ட சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான திட்டங்களைச் செயல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டிருந்தால் வட மாவடங்களில் தேர்ச்சி விகிதம் படிப்படியாக உயரத் தொடங்கியிருக்கக்கூடும். ஆனால், சமூகநீதிப் பார்வையும், தொலைநோக்குப் பார்வையும் இல்லாத அரசு அதை செய்யவில்லை.
கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வட மாவட்டங்களும், சமூகநிலையில் வன்னியர்களும் முன்னேறாமல் தமிழ்நாட்டை முன்னேற்ற முடியாது; தமிழ்நாட்டில் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை. இதை உணர்ந்து, வட மாவட்டங்கள் மீதான பாராமுகத்தைக் கைவிட்டு, வடமாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அப்பகுதிகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறிவுள்ளார்.
English Summary
In the last 15 places North Delta districts are due to government negligence Dr Ramadoss