விருத்தாசலத்தில் கொடூரம் : பட்டியலின வாலிபரைக் கட்டி வைத்து தாக்கிய கும்பல் - நடந்தது என்ன?
gang attack to scheduled young man in viruthachalam
விருத்தாசலத்தில் கொடூரம் : பட்டியலின வாலிபரைக் கட்டி வைத்து தாக்கிய கும்பல் - நடந்தது என்ன?
கடலூர் மாவட்டத்தில் உள்ள, விருத்தாசலம் அருகே இருசாள குப்பம் கிராமம் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கடந்த இரண்டாம் தேதி இரவு மதுபோதையில் விருத்தாச்சலம் பேருந்து நிலையம் அருகே பாவா மெடிக்கல் கடை வாசலில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றை தன்னுடைய வாகனம் என்று நினைத்து எடுத்துச்செநின்றுள்ளார்.
பின்னர் அந்த வாகனத்தை மதுபோதையில் வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாது என்று நினைத்து, பேருந்து நிலையம் அருகிலுள்ள பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் சதீஷ்குமார் எடுத்து வந்த இருசக்கர வாகனத்தின் உரிமையாளர், தன்னுடைய வாகனம் காணவில்லை என்று அப்பகுதியில் இருந்த சிசிடிவி வீடியோ பதிவுகளை எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், வாகனத்தை எடுத்துச் செல்லும் நபர், இருசாலகுப்பம் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரிய வந்தது. உடனே வாகனத்தின் உரிமையாளர் சதீஷ்குமாரிடம் கேட்டு வாகனத்தை வாங்கி சென்றுள்ளார்.
இருப்பினும் சதீஷ்குமார் எடுத்துச்சென்ற இருசக்கர வாகனத்தின் உரிமையாளருடைய கடையில், பணிபுரியும் ஊழியரின் நண்பர்கள் சிலர் நேற்று சதீஷை கடத்திச்சென்று, சின்னக்கண்டியங்குப்பம் அருகே உள்ள முந்திரி காட்டில் வைத்து கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் வாகனத்தை திருடியது நீதான் என்று ஒத்துக்கொள்ளுமாறு மிரட்டியுள்ளனர்.
இதனால் வலி தாங்க முடியாத சதீஷ்குமார் கையெடுத்து கும்பிட்டு, வாகனத்தை திருடினேன் என்று பயத்துடன் சொல்லும் வீடியோவும் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சதீஷ்குமார் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து சதீஷ்குமார் பேசுகையில், "நான் வாகனத்தை திருடவில்லை. மதுபோதையில் தெரியாமல் எடுத்துச் சென்றுவிட்டேன். தன்னை கொடூரமாக தாக்கிய நபர்கள் குறித்து விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். ஆனால் அந்தப் புகாரின் மீது காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
gang attack to scheduled young man in viruthachalam