தர்மபுரியில் "பூர்வ குடிகளின் வீட்டை சூரையாடி" பெண்களை தாக்கிய வனத்துறை.! பெரும் பரபரப்பு.!!
Forest dept ransacked house near Dharmapuri forest
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் குடியிருக்கும் பூர்வ குடிகளை வனத்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் பாலக்கோடு வனப்பகுதிகளில் வசித்து வரும் பூர்வ குடிகள், கால்நடை வளர்ப்போர், மீனவர்கள் உள்ளிட்டோரை வெளியேறும்படி வனத்துறை அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் வனப்பகுதி ஒட்டிய நிலத்தில் விவசாயம் செய்தவர்களை வனத்துறையினர் வெளியேற்ற முயன்றதால் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற மக்களவைப் பொதுத் தேர்தலை புறக்கணித்திருந்தனர். இந்த நிலையில் இன்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள மணல் திட்டுப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கால்நடை வளர்ப்போராகவும், மீன் பிடிப்பவர்களாகவும் வசித்து வருகின்றனர்.
அவர்களை 20க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வீடுகளின் கூரையை பிரித்து சூறையாடி பெண்களை வீட்டில் இருந்து இழுத்துவிட்டு வெளியேற்றியுள்ளனர். இந்த சம்பவத்தில் மூன்று பெண்களுக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வனத்துறையினரின் இந்த அராஜக போக்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ள பூர்வ குடிமக்கள் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கி மாற்று இடம் வழங்க வேண்டும் என பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் அதனை செய்யாமல் காவல்துறை மற்றும் வனத்துறை வைத்து தங்களை அப்புறப்படுத்த முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
English Summary
Forest dept ransacked house near Dharmapuri forest