வானில் பறந்தபடி ED ரெய்டு! ஒரு மாதமாக அதிரும் தமிழகம்!
ED Raid in sand quarry
தஞ்சை : காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
காவேரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரிகளில், அரசு நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் மணல் சூறையாடப்படுவதாகவும், இந்த குவாரிகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த புகாரின் அடிப்படையில் மணல் குவாரிகள் மற்றும் குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஒரு மாதமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த மருவூர் கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள மணல் குவாரியில் கடந்த புதன்கிழமை அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் இறங்கினர்.
மேலும் ட்ரோன்களை பறக்கவிட்டு, மணல் எந்த அளவுக்கு அள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அப்போது பலத்த காற்று வீசியதால் சோதனை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று காலை வந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ட்ரோன்கள் மூலம் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையில் மணல் குவாரியின் ஆழம், அகலம் ஆகிவற்றை அளவீடு செய்து, நடைபெற்ற முறைகேடுகளை துல்லியமாக கணக்கிட்டு நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்