பிகாரில் 65% இடஒதுக்கீடு! தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? அன்புமணி இராமதாஸ் வினா!
Dr Anbumani Ramadoss say About Bihar State reservation
பிகாரில் இட ஒதுக்கீட்டின் அளவை 65% ஆக உயர்த்தும் நிதிஷ்குமார் அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், சமூகநீதியை காக்க தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "பிகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விவரங்களை வெளியிட்டு பிற மாநில முதலமைச்சர்களுக்கு முன்னோடியாக உருவெடுத்த அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், இப்போது அடுத்தக்கட்டமாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் பிகார் மாநிலத்தில் மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டில் இருந்து 65% ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
இதன் மூலம் சமூகநீதியின் உச்சத்தை நோக்கிய பயணத்தில், தமது மாநிலத்தை மேலும் சில படிகள் உயர்த்தியிருக்கிறார். அவருக்கு எனது பாராட்டுகள்.
பிகார் மாநிலத்தில் சாதி அடிப்படையிலான 50% இட ஒதுக்கீடும், பொருளாதார அடிப்படையிலான 10% இட ஒதுக்கீடும் இப்போது நடைமுறையில் உள்ள நிலையில், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு 65% ஆக உயர்த்தப்பட்டால், மொத்த ஒதுக்கீடு 75% ஆக அதிகரிக்கும். அதன் மூலம் இந்தியாவில் அதிக விழுக்காடு இட ஒதுக்கீடு கொண்ட மாநிலமாக பிகார் உருவெடுக்கும். பிகார் அரசின் இந்த முயற்சியும் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமுகநீதியை நோக்கிய துணிச்சலான பயணத்தில் பிகாருடன் தமிழ்நாடும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். உடனடியாக தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், அருந்ததியர், பழங்குடியினர் ஆகிய அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு இத்தகைய முயற்சியை மேற்கொண்டால், அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து வகைகளிலும் துணை நிற்கும்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss say About Bihar State reservation