இந்திய பத்திரிகைகள் சங்கத் தலைவராக ஆதிமூலம்... மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து.!
Dr Anbumani Ramadoss Greetings to INS Chief Aathimoolam
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஐ.என்.எஸ் என்றழைக்கப்படும் இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் திரு. இல. ஆதிமூலம் அவர்களுக்கும், பிற பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மற்றவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய பத்திரிகைகள் சங்கத்தில் ஏற்கனவே பல்வேறு பதவிகளை வகித்துள்ள திரு. ஆதிமூலம் அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்று நடைபெற்ற சங்கத்தின் 81-ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் அனைவரின் ஆதரவுடன் இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன் இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த தினத்தந்தி அதிபர் திரு. சிவந்தி ஆதித்தனார் அவர்கள் 1995-96 இல் தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் தமிழகத்தைச் சேர்ந்த இன்னொருவர் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இது இன்னொரு சிறப்பாகும்.
இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக தினமலர் நாளிதழின் இணை நிர்வாக ஆசிரியர் திரு. இலட்சுமிபதி, தினத்தந்தி நாளிதழின் நிர்வாக இயக்குனர் திரு. பாலசுப்பிரமணிய ஆதித்தன், தினகரன் நாளிதழின் நிர்வாக இயக்குனர் திரு. ஆர்.எம்.ஆர். இரமேஷ் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுவாக இந்திய ஊடகங்களும், குறிப்பாக இந்திய அச்சு ஊடகங்களும் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன. அவற்றை போக்க அரசின் உதவியுடன் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. இத்தகைய சூழலில் இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக தேர்வாகியுள்ள ஆதிமூலமும் மற்ற நிர்வாகிகளும் இந்திய இதழியல் துறையை சிறப்பாக வழிநடத்திச் செல்ல வாழ்த்துகிறேன் " என்று கூறியுள்ளார்..
Tamil online news Today News in Tamil
English Summary
Dr Anbumani Ramadoss Greetings to INS Chief Aathimoolam