ஒட்டகத்தில் பிரச்சாரம் செய்த திமுக எம்எல்ஏ மீது வழக்கு பதிவு..!!
Case registered against DMK MLA for campaigned on camel
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக சார்பில் போட்டியிடும் கே.எஸ் தென்னரசு ஆதரித்து அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதே போன்று திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து திமுகவைச் சேர்ந்த முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகள் பலர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக அமைச்சர்கள் பொதுமக்களிடம் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் ஒட்டகத்தில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தேர்தல் ஆணையத்தின் விதிகள் படி விலங்குகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தவோ அல்லது உபயோகப்படுத்தவோ கூடாது. இந்த நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒட்டகத்தின் மீது ஏறிச்சென்று பிரச்சாரம் செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதைத் தொடர்ந்து அதிமுக சார்பில் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் மீது தேர்தல் விதிகளை மீறியது மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மீது விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Case registered against DMK MLA for campaigned on camel