சிறப்பு வகுப்புக்கு சென்ற மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்.. 60 பேர் மருத்துவமனையில் அனுமதி.!
Bees attack 60 school students in Krishnagiri
சிறப்பு வகுப்புக்கு சென்ற 60 மாணவர்களை தேனீக்கள் கொட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூரில் கலைமகள் கலாலயா என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், நேற்று, இந்தப் பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சிறப்பு வகுப்புகள் முடிவடைந்து மாலை மாணவர்கள் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியது. இதில், பள்ளி வளாகத்தில் உள்ள தேக்கு மரத்திலிருந்து திடீரென கலைந்து வெளியேறிய தேனீக்கள் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த 60க்கும் மேற்பட்ட மாணவர்களை துரத்தி துரத்தி கொட்டியுள்ளது.
இதனையடுத்து தகவலறிந்த பள்ளி நிர்வாகம் மாணவர்களை பேருந்தில் அழைத்துச் சென்று மத்தூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தினர். இதில் பெரும்பாலான மாணவர்கள் முதலுதவி பெற்று வீட்டிற்கு திரும்பிய நிலையில் 5 மாணவர்கள் மட்டும் படுகாயம் அடைந்ததால் உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
English Summary
Bees attack 60 school students in Krishnagiri