பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதலா..? அண்ணாமலையின் சர்ச்சைக்குரிய ட்விட் நீக்கம்..!!
Annamalai tweet deleted who posted as terrorist attack in Punjab
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை 4:35 மணி அளவில் திடீரென்று துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவத்தில் பீரங்கி பிரிவில் பணியாற்றி வந்த நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் சாகர் பின்னே, கமலேஷ், யோகேஷ் குமார், சந்தோஷ் நகரல் என்பது அடையாளம் காணப்பட்டது.
இதில் கமலேஷ் மற்றும் யோகேஷ் குமார் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்ற இரண்டு வீரர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதல் இல்லை என்றும் ராணுவ முகாமில் உள்ளவர்கள் வேறு ஏதேனும் காரணத்திற்காக துப்பாக்கிச் சூடு அரங்கேற்று இருக்கலாம் என பஞ்சாப் மாநில போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் "பஞ்சாப் மாநிலம் பதிண்டா இராணுவ முகாமில் நேற்று நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்களான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.கமலேஷ் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திரு.யோகேஷ் குமார் ஆகியோர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் மற்றும் அவர்களோடு வீரமரணம் அடைந்த இரண்டு ராணுவ வீரர்கள் ஆகியோரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். வீர வணக்கம்!" என பதிவிட்டிருந்தது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநில போலீசார் மற்றும் ராணுவத்தினர் தீவிரவாத தாக்குதல் இல்லை என விளக்கம் அளித்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீவிரவாத தாக்குதல் என குறிப்பிட்டு இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவை தற்பொழுது நீக்கியுள்ளார்.
English Summary
Annamalai tweet deleted who posted as terrorist attack in Punjab