திருவள்ளூரில் தொடரும் பயங்கரம்! அதிமுக பிரமுகர் ஓட ஓட வெட்டி படுகொலை!
AIADMK executive suman hacked to death in thiruvallur
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த விச்சூர் ஊராட்சிமன்ற துணை தலைவரான வைதேகியின் கணவன் சுமன் அதிமுக நிர்வாகியாக இருந்து வரும் நிலையில ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த சிலர் கோயில் திருவிழாவுக்காக பத்திரிக்கை எழுத வேண்டும் எனக்கூறி சுமனை அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சுமனை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடி உள்ளது. இதில் அதிமுக பிரமுகர் சுமன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்த நிலையில் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஞாயிற்றுக்கிழமை கோயில் திருவிழா தொடர்பாக அதே ஊரை சேர்ந்த சிலருக்கும் சுமனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
அதனால் படுகொலை செய்யப்பட்டாரா? அல்லது தொழில் போட்டி காரணமா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பொன்னேரி பகுதியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் செங்குன்றம் அருகே திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் பார்த்திபன் நடை பயிற்சிக்கு சென்ற போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
AIADMK executive suman hacked to death in thiruvallur