'ஆருத்ரா' பணம் மோசடி செய்தவர் கடத்தல்! ஏமாந்தவர்கள் செய்த ஆத்திர சம்பவம்!
Aarudhra gold scam cheated person kidnapped
சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவனம் அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு, முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி என தெரிவித்து 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, சுமார் ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
அரியலூர், மாவட்டம் இரவான்குடியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 37) என்பவரை ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செந்தில்குமார் தற்போது ஜாமீனில் வெளியே வந்த கடந்த 2 மாதமாக கோயம்பேடு சேமாத்தம்மன் நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி சென்னை உச்ச நீதிமனறத்தில் தினசரி கையெழுத்திட்டு வருகிறார்.
செந்தில்குமார் கடந்த 28-ந் தேதி வழக்கம்போல் உச்ச நீதிமனறத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு சேமாத்தம்மன் நகரில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம கும்பல் காரில் வந்து செந்தில்குமாரை கடத்தி சென்றனர்.
மேலும் செந்தில்குமாரை கடத்திய மர்ம கும்பல் அவரது மனைவி சரண்யாவை செல்போனில் தொடர்பு கொண்டு "ஆருத்ரா நிறுவனத்தில் செந்தில்குமார் மூலம் ரூ.15 லட்சம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டுள்ளோம், எங்களுக்கு உடனடியாக இழப்பீடு தொகை வேண்டும்" என்று தெரிவித்து மிரட்டியுள்ளனர்.
இதனால் சரண்யா ரூ.1 லட்சம் பணம் தருவதாக ஒப்புக்கொண்டு கடத்தல் கும்பல் தெரிவித்தபடி, காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனை அருகே சென்று காத்திருந்தார். நீண்ட நேரம் ஆகியும் அங்கு யாரும் வரவில்லை.
மேலும், கணவரின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த சரண்யா, இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் தனிபடை அமைத்து சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்து கடத்தல் கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தினர்.
இதுவரை போலீசாருக்கு செந்தில் குமார் தொடர்பாக எந்த ஒரு தகவலும் தெரியவில்லை. அனைத்து காவல் நிலையங்களுக்கும் இது குறித்து தகவல் தெரிவித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆருத்ரா கோல்டில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Aarudhra gold scam cheated person kidnapped