அதிர போகும் சென்னை .. 40 கிராம மீனவர்கள் நாளை கோட்டையை நோக்கி பேரணி செல்ல முடிவு.!!
40 village fishermen decided to rally towards fort tomorrow
சென்னை: பழவேற்காட்டின் கடற்பகுதியில் பரவிய சிபிசிஎல் நிறுவனத்தின் எண்ணெய் கழிவு படலத்தால் 40க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் எண்ணூர் கடற்கரை பகுதியில் எண்ணெய் கழிவில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகை வழங்குவது போல தங்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என பழவேற்காடு மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் பழவேற்காட்டை சுற்றியுள்ள 40 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நாளை தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருவது குறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சுதாகர், திருவள்ளூர் ஏடிஎஸ்பி ஹரிகுமார், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திரா, உதவி இயக்குனர் கங்காதரன் ஆகியோர் நேற்றிரவு பழவேற்காடு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என தெரியவருகிறது.
இதற்கிடையே பழவேற்காட்டில் இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் சமரச கூட்டம் நடைபெற்றது.இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தால் திட்டமிட்டபடி நாளை பழவேற்காட்டில் இருந்து சுமார் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் தலைமை செயலகத்தை நோக்கி பேரணி நடத்த உள்ளதால் என்பதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
English Summary
40 village fishermen decided to rally towards fort tomorrow