போளூர் அருகே கிணறு தோண்டிய 2 பேர் பலி.!
2 killed while digging a well near polur
போளூர் அடுத்த, கரிகாத்தூர் கிராமத்தில் கிணறு தோண்டும்போது மண் சரிந்து வீழ்ந்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த, கரிக்காத்தூர் கிராமத்தில் வசிப்பவர் கணேசன். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 25 நாட்களாகக் கூலி ஆட்கள் மூலம் வெடிவைத்து கிணறு தோண்டி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு, மூன்று நாட்களாகத் தொடர்ந்து பெய்யும் கன மழைக்கு கிணற்றுமண் நன்றாக ஊறி இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை, போளூர் அடுத்த, பெலாசூர் கிராமத்தைச் சார்ந்த ரவீந்திரன் மற்றும் புதுக்கரிக்காத்தூரைச் சார்ந்த அர்ஜீனன், மாயக்கண்ணன் ஆகியோர் கிணற்றில் இறங்கி வெடிவைத்து மண்ணை தூர் வார ஆரம்பித்தனர். அப்போது கிணற்றின் மேல் பகுதியில் நன்றாக ஊறியிருந்த மண், குவியலாகச் சரிந்து கிணற்றிலிருந்த மூவர் மீதும் விழுந்தது. இதனால் மூவரும் மண்ணுக்குள் புதைந்தனர்.
பின்னர் உடனடியாக, தீயணைப்பு துறை வாகனம் வரவழைக்கப்பட்டு கிணற்று மண் குவியலில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. பல மணிநேரம் போராட்டத்திற்குப்பின், தீயணைப்புத்துறை வீரர்கள் கிணற்றிலிருந்து மூவரையும் வெளியே எடுத்தனர். இதில் ரவீந்திரன், அர்ஜீனன் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மாயக்கண்ணன் என்பவரை போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
இந்த தகவலை அறிந்த போளூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் ஆய்வாளர் கோவிந்தசாமி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து, இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியே சோகத்துடன் காணப்பட்டது.
English Summary
2 killed while digging a well near polur