கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு கிடையவே கிடையாது! அமைச்சர் பொன்முடி மகன் விளக்கம்!
TNCA president says There is no political interference in cricket
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா கல்வி குழுமத்தின் பொறியியல் கல்லூரியில் புதிய கிரிக்கெட் மைதானத்தை அமைச்சர் பொன்முடியின் மகனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவருமான அசோக் சிகாமணி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் "இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உள்ள கிரிக்கெட் சங்கங்களை விட தமிழகத்தில் உள்ள கிரிக்கெட் சங்கம் தான் சிறந்த பாரம்பரியமிக்க கிரிக்கெட் சங்கமாக செயல்பட்டு வருகிறது.
தமிழக கிராமப்புறங்களில் அதிகமானோர் கிரிக்கெட் திறமை மிக்கவர்களாக உள்ளனர். அவர்களை வெளிகொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்திலிருந்து அஸ்வின், தினேஷ் கார்த்திக் போன்றவர்கள் திறமை மட்டும் தான் வெளியே தெரிகிறது. அவர்களைப் போல சாய் கிஷோர், சாய் சுதர்சன், ஜெகதீசன் போன்றோர் உள்ளனர்.
தமிழக வீரர் ஜெகதீசன் தொடர்ந்து ஐந்து சதங்கள் மற்றும் 277 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். அவருக்கு ஊடகத்தின் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கூடிய விரைவில் இந்திய அணிக்கு தேர்வாக என நம்புகிறேன். கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு என்பது கிடையவே கிடையாது.
அரசியல்வாதிகள் பரிந்துரை செய்தால் கூட கிரிக்கெட்டில் வளர முடியாது. அப்படி ஒருவர் அரசியல் பின்புலத்தில் வந்தால் கூட அவர்கள் திறமையால் மட்டுமே கிரிக்கெட்டில் நிலைத்து நிற்க முடியும். அரசியல் பின்புலம் இருந்தால் வரலாம் என்றால் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் இந்திய அணியில் தேர்வாகி இருக்கலாம். ஆனால் அது நடைபெறவில்லை. கிரிக்கெடிற்கு திறமை மட்டுமே முக்கியம்" என செய்தியாளர்களை சந்திப்பில் பேசியுள்ளார்.
English Summary
TNCA president says There is no political interference in cricket