இதுதான் சரியான தருணம்.. நாம் மறந்த விளையாட்டு.. ஞாபகப்படுத்தலாமா?
paramapadham game
இன்றைய காலக்கட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகளை நாம் மறந்து நம் சந்ததியினருக்கு உணர்த்த தவறிவிட்டோம்.
அதை இப்போது நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் சரியான தருணமாக பயன்படுத்துங்கள். அவ்வாறு நாம் மறந்து கொண்டிருக்கும் விளையாட்டான பரமபதம் பற்றி இன்று காண்போம்.
விளையாடும் முறை :
பாரம்பரிய விளையாட்டுகளில் முக்கிய இடம்பிடிப்பது பரமபதம். இவ்விளையாட்டில் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் விளையாடலாம். மிகவும் விறுவிறுப்பான மற்றும் சுறுசுறுப்பான விளையாட்டு இது.
இதற்கு தாயக்கட்டை, கல் மற்றும் பரமபதம் அடங்கிய வரைபடம் தேவை. இந்த வரைபடத்தில் பாம்புகள் மற்றும் ஏணிகள் வரையப்பட்டிருக்கும்.
பொதுவாக பரமபதத்தில் தாயக்கட்டையில் தாயம் அதாவது (ஒன்று) விழுந்ததும் ஆட்டம் துவங்கும். தாயம் விழுவதற்கு முன் எந்த நம்பர் விழுந்தாலும் கணக்கில்லை.
இவற்றில் மொத்தம் நூறு கட்டங்கள் இருக்கும். கூடவே ஆங்காங்கே பாம்புகளும், ஏணிகளும் இருக்கும். தாயக்கட்டையை உருட்டி, தாயம் விழுந்ததும் ஆட்டத்தை துவங்கி, தாயக்கட்டையில் விழும் எண்ணிற்கேற்ப நம் கல்லை நகர்த்த வேண்டும்.
பாம்பின் தலை இருக்கும் இடத்திற்கு கல் சென்றடைந்தால் அவ்வளவு தான் பாம்பின் வால் பகுதிக்கு கீழே வந்துவிடுவோம். அதேபோல் ஏணி இருக்கும் இடத்திற்கு நமது கல் சென்றடைந்தால் மேல் நோக்கி கல்லை நகர்த்தலாம். முதலாவது கட்டத்தில் ஆரம்பித்து, நூறாவது கட்டத்தை வெற்றிகரமாக சென்று சேரும் முதல் நபரே வெற்றி பெறுவார்கள்.
சுலபமான விளையாட்டாக இருந்தாலும் பல விஷயங்களை நமக்கு புரியவைக்கும். மேலும் இவ்விளையாட்டு மிகவும் ஜாலியாகவும், விறுவிறுப்பான விளையாட்டாகவும் இருக்கும். நாம் ஏணியில் சுலபமாக ஏறுவதற்கு எவ்வளவு முயற்சி தேவை என்பதை இந்தவிளையாட்டு உணர்த்தும்.
அதேவேளையில் கீழே இறங்கும்போது எவ்வளவு நிதானம் தேவை என்பதையும், வாழ்க்கையின் நெளிவு சுழிவுகளையும், சில இக்கட்டான நேரங்களில் எவ்விதம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் குழந்தைகளுக்கு புரியவைக்க இந்த விளையாட்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பரமபதம் வரலாறு :
இவ்விளையாட்டு பண்டைய இந்தியாவில் கி.மு இரண்டாம் நூற்றாண்டளவில் விளையாடப்பட்டவை ஆகும். இவை 1892 அளவில் இங்கிலாந்தில் அறிமுகமானது. இவ்விளையாட்டு நல்வினை பற்றியும், தீவினை பற்றியும் குழந்தைகளுக்கு விளக்குவதாக அமைகிறது.