அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தி..காமகோடி பீடம்..அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்.!
Today special Kanchipuram kamatchi Amman kovil
இந்த கோயில் எங்கு உள்ளது?
காஞ்சிபுரம் நகரின் மத்தியில் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
காஞ்சிபுரத்திற்கு செல்ல தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களையும் மையமாகக் கொண்ட ஒரே சக்தி ஆலயம் காமாட்சி அம்மன் கோயில் ஆகும்.
இங்கே அம்பிகைக்கு மூன்று வடிவங்கள் உள்ளன. அவற்றை ஸ்தூலம், சூட்சுமம், காரணம் என்று கூறுவார்கள். பார்த்தவுடனேயே சர்வ மங்களத்தையும் நமக்கு கோடி கோடியாக தந்தருளுவதால் 'காமகோடி காமாட்சி" என அழைக்கப்படுகிறாள்.
அம்பிகையை வணங்கி பிக்ஷத்துவாரத்தின் வழியாக 'பவதி பிக்ஷாம் தேஹி" என கையேந்தி பிச்சை கேட்டு வழிபட்டால் அம்பாள் நம்மை எவ்வித சிரமமும் இன்றி உணவு கொடுத்து காப்பாற்றுவாள் என்பது நம்பிக்கை.
வேறென்ன சிறப்பு?
அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும். இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது.
இந்த ஆலயத்தில் ஞான சரஸ்வதி, லட்சுமி, அரூப லட்சுமி, சியாமளா, வராஹி, அன்னபூரணி, அர்த்தநாரீஸ்வரர், தர்மசாஸ்தா, துர்வாச முனிவர், ஆதிசங்கரர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதி உள்ளது.
இவ்வூரில் உள்ள எந்த கோயிலில் திருவிழா நடந்தாலும் உற்சவர்கள் தங்கள் கோயிலை சுற்றுவதை தவிர்த்து, காமாட்சியம்மன் கோயிலை சுற்றி வரும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும், அவற்றில் அம்மன் சன்னதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாக திகழுகிறாள்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
மாசியில் பத்துநாள் பிரம்மோற்சவம், புரட்டாசியில் நவராத்திரி திருவிழா, ஐப்பசியில் அவதார உற்சவம் ஆகியவை ஆண்டு திருவிழாக்கள். ஒவ்வொரு பௌர்ணமியும் சிறப்பு பூஜை நடக்கும். தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு, விஜயதசமி, தீபாவளி, பொங்கல் நாட்களில் அம்மன் தங்கரதத்தில் உலா வருவாள்.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.
இத்தலத்து அம்மனின் திருவடிகளில் நவகிரகங்கள் தஞ்சம் புகுந்திருப்பதனால் காமாட்சி அம்மனை வணங்குபவர்களுக்கு நவகிரக தோஷம் ஏற்படுவதில்லை.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
அம்மனுக்கு புடவை சாற்றுதல், அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் செய்தலும் இத்தலத்தில் நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகிறது.
English Summary
Today special Kanchipuram kamatchi Amman kovil