தினம் ஒரு திருத்தலம்.. பூமியை நோக்கும் பார்வை.. சொர்க்க வாசல்.!
Kovai vengatesa Perumal Temple history
அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பரமேஸ்வரன் பாளையத்தில் அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
கோயம்புத்தூரில் இருந்து பரமேஸ்வரன் பாளையத்தில் இருக்கும் இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் இருக்கின்றன.
இக்கோயிலில் மூலவர் விஷ்ணு, வெங்கடேசப் பெருமாள் எனும் திருநாமத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாக காட்சியளிக்கின்றார். இந்த பெருமாள் பூமியை நோக்கும் பார்வை உடையவராக இருப்பது இந்த கோயிலின் பெரும் சிறப்பாகும்.
மகா மண்டபத்தின் வெளியே கருட மண்டபத்தில், கூப்பிய கரங்களுடன் நின்ற கோலத்தில், அற்புத கலையம்சத்துடன் பெருமாளை நோக்கி கருடாழ்வார் சேவை சாதிக்கின்றார்.
கருவறையின் வெளிச்சுவற்றில் பல்வேறு கால கட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட கல்வெட்டுகள், மீன் சின்னங்கள், யாளி மற்றும் பெரிய மீன் ஒன்று பாதி யானையை விழுங்கும் காட்சி என புடைப்புச் சிற்பங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளன.
அர்த்த மண்டப வாயிலில் ஜெயன், விஜயன் கம்பீரமாக காவல் புரிகின்றனர்.
கோயிலின் வடகிழக்கு பகுதியில் ஆஞ்சநேயருக்கு பிரத்யேக விமானத்துடன் கூடிய தனிச்சன்னதி இருக்கின்றது.
கோயிலின் தெற்கு பகுதியில் ராமானுஜர், பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் ஒன்றாக சேவை அளிக்கின்றனர்.
இந்த கோயிலின் வடக்குப்பகுதியில் நிலவறை இருக்கின்றது. அந்நியர் படையெடுப்பின் போது இறைத் திருமேனிகளை பாதுகாக்க அமைக்கப்பட்ட அறை இதுவாகும்.
கருட மண்டபத்தை அடுத்து புதியதாக தாமிர தகடுகள் வேயப்பட்ட, நுணுக்கமான கலையம்சத்துடன் வடிக்கப்பட்ட கொடிமரம் அமைந்துள்ளது.
வெளிச்சுற்று மதிலின் வடக்குப்பக்கம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கதவுகளை கொண்ட சொர்க்க வாசல் அமைந்துள்ளது.
இத்தல மண்டபத்தில் ஆமையும், நாகமும் புடைப்புச் சிற்பங்களாக வடித்திருக்கின்றன.
தமிழ் வருடப்பிறப்பு, ஆனி திருமஞ்சனம், கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல் மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் இக்கோயிலில் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
கிரக தோஷங்களினால் ஏற்படும் திருமணத்தடை, குழந்தையின்மை, புத்திர தோஷம், கடன் தொல்லைகள், மனநல குறைபாடு, உடல்நல குறைபாடு மற்றும் குடும்ப ஒற்றுமையின்மை ஆகியவற்றிற்கு இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
இந்த கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் மூலவருக்கு சனிக்கிழமைகளில் நெய் விளக்கேற்றி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Kovai vengatesa Perumal Temple history