தித்திக்கும் தீபாவளியை... ஆரோக்கியமானதாக கொண்டாடலாமா?
diwali special 5
தீபாவளி என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது பட்டாசுதான். அதிகாலையில் எழுந்து தலைக்கு குளித்து, புத்தாடைகளை அணிந்து கோவில்களுக்கு செல்வது, பட்டாசு வெடிப்பது, அதுமட்டுமல்லாமல், தீபாவளியன்று அதிக இனிப்புகளை உண்பது என அந்த ஒருநாள் மட்டும் முடிந்த அளவில் சந்தோஷத்தை அனுபவித்துவிட்டு, மறுநாளில் இருந்து, அந்த சந்தோஷத்தின் பலனாய் சிலர் நோய்வாய்ப்பட்டு அவஸ்தை படுகின்றார்கள்.
ஏனென்றால், இத்தனை நாட்கள் உணவு கட்டுப்பாட்டுடன் இருந்தவர்கள், தீபாவளி வந்துவிட்டால், இருக்கும் நோயை மறந்துவிட்டு, இனிப்புகளை அதிகம் சாப்பிட்டுவிடுவர். மேலும் சுவாச பிரச்சனை உள்ளவர்களும் பட்டாசுகளை பார்த்துவிட்டால் போதும் அதனை வெடிக்க ஆசைப்பட்டு அதை வெடிக்கவும் செய்வார்கள். இதனால் பிரச்சனை முற்றிவிடும். அதுமட்டுமின்றி, இதய நோய், இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.
இயற்கை உணவுப்பொருட்களை பயன்படுத்துதல் :
தீபாவளியன்று விடியற்காலை எண்ணெய் குளியல், நாம் உண்ணும் இனிப்பு, பலகாரங்கள் மற்றும் நாம் சுவாசிக்கும் பட்டாசு புகையினால் சிலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். அவற்றை தடுக்க தீபாவளி லேகியத்தை (கொத்தமல்லி, ஓமம், மிளகு, சீரகம், மஞ்சள், சுக்கு, சிற்றரத்தை, கண்டந்திப்பிலி, அரிசி திப்பிலி, நெய், தேன், நாட்டு வெல்லம் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படுவது.) உணவு உண்பதற்கு 10 நிமிடத்திற்கு முன் எடுத்துக் கொள்வது சிறந்தது. அதனால் கிடைக்கும் கலோரியும் குறைவாக இருக்கும்.
ஆரோக்கியமான எண்ணெயை பயன்படுத்துதல் :
தீபாவளியன்று அனைவரும் வீட்டில் இருப்பதால் நல்ல சுவைமிக்க சமையலை செய்து சாப்பிட தோன்றும். அதனால் அளவே இல்லாமல் சாப்பிடுவோம். ஆகவே, அப்போது ஏதாவது ஒரு சமையல் எண்ணெயை பயன்படுத்துவதை விட, நல்ல சுத்தமான எண்ணெயை பயன்படுத்துவது நல்லது. இதனால் உடலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாகாமல் இருக்கும்.
நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை சேர்க்காத இனிப்புகளை வாங்கி சாப்பிடலாம்.
பாதுகாப்பாக பட்டாசு வெடித்தல் :
சுவாச பிரச்சனை உள்ளவர்கள், பட்டாசுகளை எப்போதுமே வெடிக்கக்கூடாது என்பதில்லை. ஆனால், அவ்வாறு பட்டாசு வெடிக்கும்போது, அந்த புகையை நேரடியாக சுவாசிக்காமல் மூக்கில் ஏதேனும் ஒரு துணியைக் கட்டிக் கொண்டோ அல்லது பட்டாசை வைத்தப்பின் அருகில் இல்லாமல் மிகவும் தூரமாகவோ இருப்பது நல்லது.
கம்பி மத்தாப்பு போன்ற பட்டாசுகளை குழந்தைகள் கையில் வைத்து சுற்றும்போது, துணிகளில் படாமல் கையாளும் முறைகளை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக சொல்லித்தர வேண்டும். பட்டாசுகளை வெடித்துவிட்டு அதனை தண்ணீர் ஊற்றி அணைத்துவிடவேண்டும். கால்நடைகளின் அருகில் பட்டாசுகளை வெடிக்காமல் தள்ளி வெடிக்க வேண்டும்.