ஈரோடு கிழக்கில் தாமரை மலருமா..? கடலூரில் பாஜக செயற்குழு கூட்டம்...!!
TN BJP working committee meeting in Cuddalore
பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் தேசிய மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி தலைமையில் இன்று கடலூரில் நடைபெற உள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை தனியார் திருமண மண்டபத்தில் பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட தமிழக பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். அதனைத் தொடர்ந்து மாலை ஈரோடு இடைத்தேர்தல் பணிக்குழு கூட்டமும் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக சட்டப்பேரவை தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தின் பொழுது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்தான முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது. பாஜக தொண்டர்கள் தனித்து போட்டியிட வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அது தொடர்பான ஆலோசனை நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமாகா போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது அதிமுகவின் விருப்பத்தை ஏற்று விட்டுக் கொடுப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் அறிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுக மற்றும் பாஜக இடையே முரண்பாடு இருந்து வரும் நிலையில் இன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்தின் முடிவில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவது குறித்தான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
TN BJP working committee meeting in Cuddalore