குற்றவாளிகளுக்கு சிக்கன்.. மாணவர்களுக்கு உப்புமா.. திமுக அரசை விளாசிய செல்லூர் ராஜு.!!
Sellur Raju reviews DMK govts students breakfast plan
மதுரையில் அதிமுக நிர்வாகியின் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விளம்பரத்திற்காக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் வீட்டு பயன்பாட்டிற்கான மின்கட்டண உயர்வு நேரடியாக உயர்த்தப்படவில்லையே தவிர மறைமுகமாக டெபாசிட் செலுத்த சொல்கின்றனர்.
மாதந்தோறும் மின்சார கட்டணம் கணக்கெடுக்கப்படும் என சொல்லிவிட்டு பழைய நடைமுறையிலேயே மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதுரை எய்ம்ஸ் குறித்து தமிழக முதலமைச்சரின் மகன் செங்கல் தூக்கிக்கொண்டு சுற்றிக்கொண்டு இருந்தார். ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடம் ஆன பிறகு இவர்கள் என்ன செய்தார்கள்.
தமிழகத்தில் இருக்கும் மருத்துவமனையின் தரத்தையே இவர்களால் காப்பாற்ற முடியவில்லை. சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, தர்மபுரி மருத்துவமனை, திருச்சி மருத்துவமனை ஆதியாவற்றின் தரம் குறைவாக இருப்பதாக மாணவர் சேர்க்கையை ரத்து செய்தனர். தன்னுடைய குறையை போக்க வக்கில்லை, வகையில்லை. அவ்வாறு இருக்கும் போது இவர் மத்திய அரசை குறை சொல்கிறார்.
மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பிய பிறகு தற்போது சீர் செய்து அறிக்கை அனுப்பியுள்ளனர். இதை ஏன் முதலில் செய்யவில்லை. அவர் திறமையற்ற முதல்வர் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு. நீட் தேர்வை ரத்து செய்வேன் என வாக்குறுதிஸ் அளித்தனர். செய்தார்களா.?
எங்கள் அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வந்தார். அதனால்தான் தற்பொழுது அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ சேர்க்கை அதிகமாகியுள்ளது. எங்கள் ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தோம். இவர்கள் கொடுக்கவில்லை. காலை உணவு திட்டம் என விளம்பரம் செய்தனர். அந்தத் திட்டத்தின் மூலம் உப்புமா, கிச்சடி மட்டுமே பள்ளி மாணவர்களுக்கு கொடுத்தால் என்ன அர்த்தம்.
இதற்கு பெரிய அளவில் ஒப்பந்த புள்ளி கோர உள்ளனர். அதில் என்ன நடக்கப் போகிறது என தெரியவில்லை. ஆனால் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு மட்டன், சிக்கன் இதெல்லாம் கொடுக்கிறார்கள். சிறையில் இருக்கும் கைதிகளுக்கு வசதியான, திடகாத்திரமான சாப்பாடு கொடுக்கின்றனர். ஆனால் பள்ளி மாணவர்களுக்கு திடகாத்திரமான உணவு வழங்கவில்லை. தினமும் பள்ளி மாணவர்களுக்கு உப்புமா, கிச்சடி, சேமியா இதையே சுழற்சி முறையில் வழங்குகின்றனர். கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு நிதி உதவி வழங்குகிறது என்றால் இந்த அரசாங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
Sellur Raju reviews DMK govts students breakfast plan