கூலிப்படை ஏவி கொலை செய்ய திட்டம்? பாமக செயலாளருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.!
police protection for pmk member
விழுப்புரம் மாவட்ட பாமக செயலாளரை கூலிப்படையை ஏவி சதிதிட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி. இவர் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட செயலாளர் புகழேந்தி புகைப்படத்தை யாரோ மர்ம நபர்கள் சிலர் கூலிப்படையை சேர்ந்தவர்களிடம் கொடுத்து அவரை கொலை செய்ய சொல்லி இருப்பதாக தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாமக மாவட்ட செயலாளர் புகழேந்தியை நேரில் அழைத்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் விசாரணை நடத்தினர். அப்போது தொழில் ரீதியாகவோ அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக எதிரிகள் இருக்கிறார்களா என போலீசார் அவரிடம் விசாரித்தனர்.
இதைத்தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமக மாவட்ட செயலாளர் புகழேந்திக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சிந்தாமணியில் உள்ள புகழேந்தியின் வீட்டு முன்பும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
police protection for pmk member