செல்லூர் ராஜூ, சி.வி சண்முகம் நாவை அடக்குங்க! அதிமுகவை எச்சரிக்கும் பாஜக!
Narayanan thirupathy warn AIADMK SellurRaju CVShanmugam
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை கடந்த 1951ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற கூட்டத்தில் ஹிந்து கடவுள் குறித்து பேசியதாக பத்திரிகைகளில் வந்த செய்தியின் அடிப்படையில் அண்ணாமலை சில நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தால் அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளிடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சிபி சண்முகம் ஆகியோர் அண்ணாமலையின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது சமூக வலைதள பக்கத்தில் "உண்மை சுடத்தான் செய்யும். வரலாற்றை மறைக்கவோ, மறக்கவோ முடியாது. 'அடியே மீனாட்சி, உனக்கெதற்கடி மூக்குத்தி, கழற்றடி கள்ளி' என்று அண்ணாதுரை அவர்கள் சொன்னதும் உண்மை. அதற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்கள் எதிர்வினையாற்றியதும் உண்மை.
அதை எங்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டால் 'நாக்கு இருக்காது' என்று வாய்சவடால் விடும் செல்லூர் ராஜு போன்றவர்கள் நாக்கை அடக்க வேண்டும். அண்ணாவின் பெயரை தான் அண்ணாமலை வைத்திருக்கிறார் என்று சொல்வது வேடிக்கை. இறைவன் 'அண்ணாமலை' யின் பெயரை கொண்டே அண்ணாதுரை அவர்களின் பெயர் வைக்கப்பட்டது என்பதே உண்மை.
அதிமுகவை சேர்ந்த சி.வி. சண்முகம் எங்கள் தலைவர் அண்ணாமலை அவர்களை ஒருமையில் விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு மட்டுமே 'மைக்' கிடைக்கும் , நாக்கு இருக்கிறது என்று நினைத்து பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
எங்களுக்கும் பேசத் தெரியும். உண்மை சுடத்தான் செய்யும். வரலாற்றை மறைக்கவோ, மறக்கவோ முடியாது" என பதிவிட்டுள்ளார். இதனால் அதிமுக மற்றும் பாஜக இடையே கருத்து மோதல் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் தற்போது அண்ணாதுரை குறித்து பேசி இருப்பது தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக நிலைக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Narayanan thirupathy warn AIADMK SellurRaju CVShanmugam