பழனிச்சாமி தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டார்! ஆளுநர் சந்திப்பு குறித்து தங்கம் தென்னரசு விமர்சனம்!
Minister Thangam Thennarasu said EPS wakes up from his sleep
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தது தொடர்பாக தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இன்று மாலை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் "தமிழக ஆளுநரை சந்தித்து பொய்களின் மொத்த வடிவத்தை புழுகு மூட்டைகளாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி வழங்கி உள்ளார்.
அதிமுகவை யார் கைப்பற்றுவது என ஒரு பக்கம் யுத்தம் நடந்த கொண்டிருக்கிறது. அந்த யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என்று தன்னுடைய எஜமானர்களை சந்தித்து விட்டு வந்த அவர் தான் எதிர்க்கட்சித் தலைவர் என்ற நினைப்பு வந்தவுடன் ஆளுநரை சந்திக்க சென்றுள்ளார்.
கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி நடந்தது. கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம் ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம் நவம்பர் 13ஆம் தேதி நடந்தது. இவையெல்லாம் பல்வேறு காலங்கட்டத்தில் நடைபெற்றுள்ளன. ஆனால் தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டது போல ஆளுநரை சந்தித்து புகார் மனு அளிக்க என்ன காரணம்.
ஒருவேளை அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனையில் தனக்கு சாதகமாக நிலையை உண்டாக்குவதற்காக ஆளுநரிடம் சென்று முறையிட்டாரா என்ற சந்தேகம் எழுகிறது. இன்னொரு புறம் தினமும் ஒரு அறிக்கையை வெளியிட்டு ஊடக வெளிச்சத்தை உருவாக்கி அதன் வாயிலாக நாங்கள் தான் எதிர்க்கட்சி என்ற தோற்றத்தை பாஜக நிலை நிறுத்த முயற்சி செய்கிறது.
பாஜகவிற்கு எந்த பதிலையும் கொடுக்க முடியாத பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் என்ற நினைப்புடன் இன்று ஆளுநரை சந்திப்பது ஏன்? தூக்கத்தில் இருந்த அவருக்கு இப்பொழுது தான் விழிப்பு வந்ததாக நான் எண்ணுகிறேன்" என எடப்பாடி பழனிச்சாமியை அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக விமர்சனம் செய்தார்.
English Summary
Minister Thangam Thennarasu said EPS wakes up from his sleep