“மாஸ் மட்டும் போதாது, ஜெயிக்கணும்” – அண்ணாமலையை சீண்டிய குஷ்பு.. பாஜகவில் வெடித்த மோதல்
Mass alone is not enough we have to win Khushbu who insulted Annamalai Conflict erupts in BJP
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது. இந்த நிலையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து நடிகையும், தமிழ்நாடு பாஜக துணைத் தலைவருமான குஷ்பு கூறிய கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் குஷ்புவிடம்,“அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவராக வந்த பிறகு கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்ததாக கூறப்படுகிறது. அவருடைய பெயரை சொன்னாலே பெரிய எதிரொலி இருக்கிறது” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த குஷ்பு,“மாஸ் மட்டும் வைத்துக் கொண்டு ஜெயிக்க முடியாது. அண்ணாமலைக்கு இவ்வளவு மாஸ் இருக்கிறது என்றால் அவர் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றிருக்கலாம். எனக்கு முக்கியம் தனிப்பட்ட வெற்றி அல்ல, கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதுதான்” என்று கூறினார்.
மேலும், “பாஜகவில் அண்ணாமலைக்கு முன் – அண்ணாமலைக்கு பின் என்று நான் சொல்ல மாட்டேன். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு அஸ்திவாரம் வைத்தவர்கள் இல.கணேசன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் போன்ற தலைவர்கள் தான். அவர்கள் கட்சிக்காக நீண்ட காலம் உழைத்தவர்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழிசை சவுந்தரராஜன் குறித்து பேசும்போது,“ஒரு காலத்தில் பாஜகக்கு நோட்டாவை விட குறைவாக வாக்குகள் கிடைத்தாலும் கூட தமிழிசை சவுந்தரராஜன் கட்சிக்காக கடுமையாக உழைத்தார். மக்கள் கேலி செய்தாலும் அவர் கட்சியை விட்டு செல்லவில்லை” என்று குஷ்பு தெரிவித்தார்.
அதேபோல் தற்போதைய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பற்றியும் அவர் கருத்து தெரிவித்தார்.
“நயினார் நாகேந்திரன் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. அவர் தனது பாணியில் கட்சியை முன்னேற்றி வருகிறார். அண்ணாமலை வேறு பாணியில் செயல்பட்டார்” என்று கூறினார்.
மேலும்,“அண்ணாமலை நல்ல பேச்சாளர். அவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. எங்கு பேச வேண்டும், எவ்வளவு பேச வேண்டும் என்பதை அவர் அறிவார். அதனால் தான் தனது கருத்துகளை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்க முடிகிறது” என்றும் குஷ்பு பாராட்டினார்.
இருப்பினும் “பாஜகவில் அண்ணாமலைக்கு முன் – அண்ணாமலைக்கு பின் என்ற வகையில் கட்சியை பிரித்து பார்க்க முடியாது” என்ற அவரது கருத்து அண்ணாமலை ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த கருத்து தற்போது அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் விவாதமாக மாறியுள்ளது.
English Summary
Mass alone is not enough we have to win Khushbu who insulted Annamalai Conflict erupts in BJP