'விஜய் தமிழ் நாட்டின் நலன் பற்றிப் பேசுவது வெற்று முழக்கங்களாகவே உள்ளன'; மார்க்சிஸ்ட் உ.வாசுகி காட்டம்..!
Marxist U Vasuki says Vijays talk about the welfare of Tamil Nadu is just empty slogans
சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்துகொண்டு பேசியதாவது:
ஒரு அரசியல் கட்சி யாரிடம் இருந்து நிதி பெறுகிறது என்பது அந்தக் கட்சியின் நேர்மையை அளவிடும் மிக முக்கியமான அளவுகோலாகும் என்றும், கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் சமூக விரோதிகளிடம் நிதி பெறும் கட்சிகளால் ஒருபோதும் மக்களுக்கான கட்சியாகச் செயல்பட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
அதனால்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அத்தகையோரிடம் நிதி வசூலிப்பதில்லை என்ற விதி முறையை கொண்டுள்ளது என்றும், நாம் யாருக்காக போராடுகிறோமோ எளிய மக்களிடம் நிதி பெற்று அவர்களுக்காகவே உழைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போது மேற்காசியப் பகுதியில் நிலவும் போர்ச் சூழல் பெரும் கவலையளிக்கிறதாகவும், இந்தியாவின் அழைப்பை ஏற்று விசாகப் பட்டினத்தில் நடந்த கடற் படை பயிற்சியில் பங்கேற்று திரும்பிய ஈரானியப் போர்க் கப்பலை, இலங்கை அருகே சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்துள்ளது.
இதில் 130 பேர் பயணித்தார்கள். இந்த கொடூரமான செயலை செய்த பிறகு அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமைதியான மரணம் என்று பெருமையாக பேசுகிறார் என்று சுட்டிக்காட்டியதோடு, இந்தத் தாக்குதல் நடந்த பிறகும் பிரதமர் மோடி மௌனம் காப்பது வெட்கக் கேடானது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தியாவின் சுயமரியாதையை அடகு வைத்து மோடி மௌனமாக இருக்கிறார் என்றும், ஈரான் மீதான இஸ்ரேல் அமெரிக்கா தாக்குதலால் 165 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இதை பிரதமர் மோடி கண்டிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் பட்ஜெட்டை அமெரிக்காதான் தாக்கல் செய்யும் போல. மக்களின் துயரங்களைப் பற்றிப் பேசாமல், தமிழ்நாட்டில் புதிதாக அரசியல் களத்திற்கு வந்துள்ள விஜய் தமிழ் நாட்டின் நலன் பற்றிப் பேசுவது வெற்று முழக்கங்களாகவே உள்ளன என்று கூறியுள்ளார்.

அத்துடன் விஜய் ரசிக மனநிலையில் உறுப்பினர்களை அவர் வைத்திருப்பது தமிழக அரசியலின் தரத்தைத் தாழ்த்தும் செயலாகும் என்றும், வரவிருக்கும் தேர்தல் என்பது தமிழ்நாட்டின் மதச்சார்பின்மை, ஜனநாயகம், மாநில உரிமைகள், மக்கள் நலன் பாதுகாப்பதற்கானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாஜக மற்றும் அதனுடன் கரம் கோர்க்கும் அதிமுகவை முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும், சுயநலனுக்காக ஒற்றை தலைவரை முன்னிறுத்தும் கட்சிகளை நிராகரிக்க வேண்டும் என்றும், திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெறுவது இன்றைய தேவை என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
Marxist U Vasuki says Vijays talk about the welfare of Tamil Nadu is just empty slogans