4 ஆடுகளை மட்டுமே வைத்திருந்தவருக்கு.." 3 லட்சத்தில் வாட்ச் வந்தது எப்படி..?" - கே.எஸ் அழகிரிக்கு சந்தேகம்..!!
KS Alagiri ask inquiry on who giving money to Annamalai
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின், அவருடைய குடும்பத்தினர், திமுகவின் முக்கிய தலைவர்கள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார்.
மேலும் அண்ணாமலை கட்டியிருந்த வாட்ச் குறித்தான ரசீதையும் வெளியிட்டு இருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக மாதம் தோறும் 7 முதல் 8 லட்சம் ரூபாய் தனக்கு செலவாகுவதாகவும், அதனை சுற்றியுள்ள நண்பர்களும் நல்லவர்களும் பார்த்துக் கொள்வதாக மேடையில் பேசியிருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி அண்ணாமலைக்கு மாதந்தோறும் இவ்வளவு பணம் யார் கொடுக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "50 ஆண்டு பொது வாழ்க்கையில் 2முறை சட்டமன்ற உறுப்பினர், 1 முறை மக்களவை உறுப்பினர், காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் நான், நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.16000 வாடகைக்கு குடியிருக்கிறேன். 1 வருடமாக வாடகை கட்டவில்லை என நோட்டீஸ் பெறுகிற நிலையில் இருக்கிறேன்.
4 ஆடுகளை மட்டுமே வைத்திருந்ததாக கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாதம் ஒன்றுக்கு மூன்றே முக்கால் லட்சம் வீட்டு வாடகை எப்படி கொடுக்க முடிகிறது? 3 லட்ச ரூபாய் கை கடிகாரமும் எப்படி அணிய முடிகிறது? இதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்."என ட்விட் செய்துள்ளார்.
English Summary
KS Alagiri ask inquiry on who giving money to Annamalai