ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் ராவணன் மாரடைப்பால் மரணம்.!
Jayalalithaa's political advisor ravanan death
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகரான ராவணன் மாரடைப்பால் காலமானார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராதா நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராவணன். இவர் சசிகலாவின் சித்தப்பா கருணாகரன் என்பவரின் மருமகன். அதிமுகவில் சசிகலா செல்வாக்கு மிக்கவராக இருந்த காலகட்டத்தில் கோவை மண்டல அதிமுகவின் அறிவிக்கப்படாத முக்கிய நிர்வாகியாக பணியாற்றினார்.
கொங்கு மண்டலத்தை சேர்ந்த பல்வேறு முக்கிய தலைவர்களை அதிமுகவுக்கு அடையாளம் காட்டியவர் இவர். சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை கட்சியை விட்டு நீக்கிய போது ராவணனையும் ஜெயலலிதா கட்சியிலிருந்து நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கி திருச்சியில் அவரது மகனின் மருத்துவ உயர் படிப்புக்காக அவருடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவரது உடல் அவரது சொந்த ஊரான மன்னார்குடி அருகே ராதா நரசிம்மபுரம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று மாலை அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. தற்போது அவரது இறப்புக்கு அதிமுக நிர்வாகிகள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Jayalalithaa's political advisor ravanan death