ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ரேகை வைக்கலைனா காலி தான்! கார்டு ப்ளாக் ஆயிடும்!
Important announcement for ration card holders If you donot provide your fingerprint you in trouble your card will be blocked
தமிழ்நாட்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் வழங்கப்படும் குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் விவரங்களை புதுப்பிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, குடும்ப அட்டைகளில் பெயர் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது கைவிரல் ரேகை (பயோமெட்ரிக்) விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.
குறிப்பாக முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்கள் இந்த நடைமுறையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பயோமெட்ரிக் பதிவு செய்யாதவர்கள் ஜூன் 25-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் அளவு, குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. எனவே குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் சரியாக பதிவாகி இருப்பது அவசியம் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
வேலை, கல்வி அல்லது பிற காரணங்களால் சொந்த ஊரை விட்டு வேறு மாவட்டங்கள் அல்லது வெளிமாநிலங்களில் வசித்து வருபவர்களும் தங்களது பயோமெட்ரிக் பதிவை மேற்கொள்ளலாம். "ஒரே நாடு - ஒரே ரேஷன் அட்டை" (One Nation One Ration Card) திட்டத்தின் கீழ், அவர்கள் தற்போது வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் கைவிரல் ரேகையை பதிவு செய்யும் வசதி உள்ளது.
குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யாரேனும் உயிரிழந்திருந்தால், அவர்களின் பெயர்களை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக வட்ட வழங்கல் அலுவலகத்தில் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். அல்லது சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளரிடம் குடும்ப அட்டை எண் மற்றும் உயிரிழந்தவரின் ஆதார் அட்டை நகலை வழங்கி பெயர் நீக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
ஆதார் அடிப்படையிலான KYC சரிபார்ப்பு நடைமுறை பல மாதங்களாக நடைபெற்று வந்தாலும், நாடு முழுவதும் சுமார் 36 லட்சம் பேர் இன்னும் விரல் ரேகை பதிவை மேற்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால், பெயர் நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
போலி குடும்ப அட்டைகள், தவறான பயனாளர்கள் மற்றும் ரேஷன் விநியோக முறைகேடுகளைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் விளக்குகின்றனர். எனவே, அந்த்யோதயா மற்றும் முன்னுரிமை ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களும் உடனடியாக தங்களது பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பித்து, தேவையான திருத்தங்களை மேற்கொண்டு எதிர்கால சிக்கல்களைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Important announcement for ration card holders If you donot provide your fingerprint you in trouble your card will be blocked