திமுகவுக்கு அதிரடி தடை விதித்த உயர்நீதிமன்றம்!
dmk protest cancel by court
கோவை மாநகராட்சியில் 100 சதவீதம் சொத்து வரி உயர்த்தி மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் .மேலும் கோவை மாநகராட்சியின் குடிநீர் பராமரிப்புக்கான ஒப்பந்தத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.
கோவை மாநகராட்சி இந்த இரண்டு அறிவிப்பையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வரும் 27 ஆம் தேதி கோவையில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
திமுக நடத்தவுள்ள போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோவையை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரிந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் என்.சேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோவை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்ட்டுள்ள சொத்து வரி உயர்வை சென்னை உயர் நீதிமன்றத்தாலும், மதுரை உயர் நீதிமன்ற கிளையும் உறுதி செய்துள்ளதாகவும், எனவே கோவை மாநகராட்சியை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
அதேபோல, திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டத்துக்கு இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும், அதையும் மீறி சட்டவிரோதமாக போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசுத்தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சொத்து வரி உயர்வு தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், கோவையில் திமுக அறிவித்தவேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதித்தனர்.
மேலும், இந்த மனு மீது பதிலளிக்குமாறு, தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
English Summary
dmk protest cancel by court