திமுகவில் வாரிசுகளுக்காக உருவாக்கப்பட்ட புதிய அணிகள்! துரைமுருகன் மகனுக்கு முக்கிய பொறுப்பு!
DMK create New teams for heirs of senior Dmk admis
திமுகவில் உள்ள அனைத்து அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமனம் சமீபத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திமுகவில் புதியதாக இரண்டு அணிகளை உருவாக்கி அதற்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி தலைவராக திமுகவின் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தலைவராகவும், முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதே போன்று அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணைச் செயலாளர்களாக சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பணப்பட்டி கே.தினகரன், நாகர்கோயில் எம்.சிவராஜ், பொன்னேரியை சேர்ந்த ஏ.ஆர்.டி உதயசூரியன், கோவையை சேர்ந்த விஷ்ணு பிரபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராக மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மாறனின் மகன் தயாநிதி மாறன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி, எஸ்.ஆர் பார்த்திபன், ஈஸ்வரப்பன், பைந்தமிழ், பாரி, வே.நம்பி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுகவில் உள்ள ஒரு சில மூத்த அமைச்சர்களின் வாரிசுகளுக்கு பதவி வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அவர்களுக்கான புதிய அணி உருவாக்கப்பட்டு பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவில் எழும் உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டு வர ஸ்டாலின் முயற்சிப்பதாகவே தெரிய வருகிறது. இனி எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் திமுக நிர்வாகிகள் எந்த ஒரு மனக்கசப்பும் இல்லாமல் தீவிரமாக செயல்படுவார்கள் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
English Summary
DMK create New teams for heirs of senior Dmk admis