ஈரோடு இடைத்தேர்தல்.. காங்கிரஸ் கட்சிக்கு கமல் ஆதரவு.. நன்றி தெரிவித்த கே.எஸ்.அழகிரி.!
Congress ks alagiri thanks to MNM kamalahasan
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த ஜனவரி 4ம் தேதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மறைந்ததை அடுத்து தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் திமுக கூட்டணி கட்சிகளை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். அதேபோன்று திமுக கூட்டணியில் இடம்பெறாத நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதரவு கோரி இரண்டு நாட்களுக்கு முன்பு கட்சியின் தலைவர் கமலஹாசனை சந்தித்து பேசி இருந்தார். மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு தெரிவிப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். மேலும் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிக்காக நானும், கட்சியினரும் இயன்ற உதவியை செய்வோம் எனக் கூறியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக மக்கள் நீதி மையத் தலைவர் கமலஹாசன் அறிவித்திருப்பது தமிழக அரசியலின் அடுத்த திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவை வழங்கியுள்ள மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நன்றி தெரிவித்துள்ளார்.
English Summary
Congress ks alagiri thanks to MNM kamalahasan