#கோவை | பாஜக அலுவலக பெட்ரோல் குண்டு வழக்கு - சதாம் உசேன், அகமது சிகாபுதீன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது!
Coimbatore BJP office petrol bomb case National Security Act
கோவை : பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 22-ம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் அமைந்துள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், துடியலூர் பகுதியைச் சேர்ந்த பிஃஎப்ஐ முன்னாள் நிர்வாகி, எஸ்டிபிஐ கட்சியின் உறுப்பினர் சதாம் உசேன் என்பவரை கைது செய்தனர்.
மேலும், துடியலூர் ஆர்.எஸ்.தோட்டம், நேரு வீதியைச் சேர்ந்த அகமது சிகாபுதீன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இவருக்கு இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போலீசாரின் அறிக்கையில், "கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம், சேரன் காலனியைச் சேர்ந்த சதாம்உசேன் (32), மற்றும் துடியலூர் ஆர்.எஸ்.தோட்டம், நேரு வீதியைச் சேர்ந்த அகமது சிகாபுதீன் (24) ஆகியோர் கடந்த 22.09.2022 ஆம் தேதி கோவை மாநகர் வி.கே.கே.மேனன் ரோட்டில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு அருகே பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக சி1 காட்டூர் காவல் நிலைய குற்ற எண். 478/2022 u/s 153 (A), 285 IPC @ 153 (A), 436,511 IPC & 3 of Explosive Substance Act ன் படி பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்படனர்.
நீதிமன்ற உத்தரவின் படி கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வரும் இருவர் மீதும், கோவை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான நகல்கள் இன்று (13.10.2022 ஆம் தேதி) கோவை மத்திய சிறையில் மேற்படி இருவருக்கும் வழங்கப்பட்டது" என்று போலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Coimbatore BJP office petrol bomb case National Security Act